/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆயத்த ஆடை உற்பத்தி; பயிற்சியின்போதே வேலை
/
ஆயத்த ஆடை உற்பத்தி; பயிற்சியின்போதே வேலை
ADDED : பிப் 24, 2025 01:04 AM
திருப்பூர்; 'நிப்ட்-டீ' கல்லுாரி பகுதி நேர பயிற்சி மையத்தில், 6வது பிரிவு ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சிகள் வரும் மார்ச் 9 ல் துவங்குகிறது.
திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி வளாகத்தில், பகுதி நேர ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி வகுப்புகள், கடந்த 2023 முதல் நடத்தப்பட்டுவருகிறது. ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், புதிதாக ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரிய விரும்புவோர் மற்றும் புதிய தொழில்முனைவோருக்கு, அப்பேரல் மெர்ச்சன்டைசிங், குவாலிட்டி கன்ட்ரோல், பேட்டர்ன் மேக்கிங், ஓவர்லாக், பிளாட் லாக், பவர் சிங்கர் பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் அளிக்கப்பட்டுவருகிறது.
பயிற்சியின் போதே வேலை
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை, காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிவினருக்கும், 25 வாரங்கள் வகுப்புகள் முடிக்கப்பட்டு, செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெறுவோருக்கு, 'ஓ' கிரேடு; 75 சதவீத மதிப்பெண் பெறுவோருக்கு 'ஏ' கிரேடு; 50 சதவீத மதிப்பெண் பெறுவோருக்கு 'பி' கிரேடு சான்றிதழ் வழங்கப்படுகிறது. புதியவர்களுக்கு பயிற்சியின்போதே, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுக்கொடுக்கின்றனர்.
6வது பயிற்சி வகுப்புகள்
இதுவரை நான்கு பயிற்சி வகுப்புகள் முடிந்தநிலையில், 50 பேருக்கு ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் துவங்கிய 5வது பயிற்சி வகுப்பில், 24 பேர் இணைந்து ஆடை உற்பத்தி பயிற்சி பெற்றுவருகின்றனர். 6வது பயிற்சி வகுப்புகள், வரும் மார்ச் 9ல் துவங்க உள்ளது. அதற்கான மாணவர் சேர்க்கை தற்போது துவங்கியுள்ளது.

