/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உரிமையாளரை தாக்கி 13 விசைத்தறிகள் கபளீகரம்: பின்னணியில் கடன் விவகாரம்
/
உரிமையாளரை தாக்கி 13 விசைத்தறிகள் கபளீகரம்: பின்னணியில் கடன் விவகாரம்
உரிமையாளரை தாக்கி 13 விசைத்தறிகள் கபளீகரம்: பின்னணியில் கடன் விவகாரம்
உரிமையாளரை தாக்கி 13 விசைத்தறிகள் கபளீகரம்: பின்னணியில் கடன் விவகாரம்
ADDED : டிச 01, 2025 05:47 AM

பல்லடம்: பல்லடம் அடுத்த, கரடி வாவியை சேர்ந்தவர் ஜெகநாதன், 50; இவருக்கு சொந்தமான இடத்தில், 20 விசைத்தறிகள் அமைத்து நெசவு தொழில் செய்து வருகிறார்.
கடந்த, 2019ல் தொழிலை மேம்படுத்த வேண்டி தனக்குத் தெரிந்த ஒருவரிடம், 4.50 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். வட்டி மற்றும் அசல் தொகையை மாதந்தோறும் செலுத்தி வந்துள்ளார். தொழில் நலிவடைந்த நிலையில், ஜெகநாதனால் தொடர்ந்து பணத்தை செலுத்த முடியவில்லை.
நேற்று முன்தினம் இரவு ஆட்களுடன் வந்த சிலர், ஜெகநாதனுக்கு சொந்தமான, 13 தறிகளை பெயர்த்து எடுத்துச் சென்றனர். கேள்வி எழுப்பிய ஜெகநாதனையும் தாக்கிவிட்டு தறிகளுடன் அங்கிருந்து சென்றனர். காயமடைந்த ஜெகநாதனை, உறவினர்கள் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஜெகநாதன் கூறியதாவது: வாங்கிய கடன் தொகைக்காக, கடந்த, 4 ஆண்டில், வட்டியுடன் சேர்த்து, 5.71 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளேன். நிலத்தை விற்று விரைவில் பணத்தை திருப்பி செலுத்துவதாக கூறியிருந்தேன். கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணையும் நடந்து வருகிறது. நேற்று முன்தினம், ஆயுதங்களுடன் வந்த, 20க்கும் மேற்பட்டவர்கள் தறி குடோனுக்குள் புகுந்து, ஓடிக்கொண்டிருந்த தறிகளை நிறுத்திவிட்டு, தறி இயந்திரங்கள், மோட்டார்கள் உள்ளிட்டவற்றை கழற்றி, வேனில் ஏற்றி சென்றனர். கேள்வி கேட்ட என்னை அடித்தும், கத்தியால் தாக்கியும் காயப் படுத்தி விட்டு, 13 தறிகளை எடுத்து சென்றனர்.
தறிகளை மீட்டுத் தருவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, ஜெகநாதன் கூறினார். காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

