/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2 ஆயிரம் பஸ்! திருப்பூரில் இருந்து வெளியூருக்கு இயக்கம்: பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு ஏற்பாடு
/
2 ஆயிரம் பஸ்! திருப்பூரில் இருந்து வெளியூருக்கு இயக்கம்: பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு ஏற்பாடு
2 ஆயிரம் பஸ்! திருப்பூரில் இருந்து வெளியூருக்கு இயக்கம்: பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு ஏற்பாடு
2 ஆயிரம் பஸ்! திருப்பூரில் இருந்து வெளியூருக்கு இயக்கம்: பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு ஏற்பாடு
UPDATED : ஜன 08, 2026 06:10 AM
ADDED : ஜன 08, 2026 05:39 AM

திருப்பூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூரில் உள்ள மூன்று பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து, 2,000 பொங்கல் சிறப்பு பஸ்கள், வரும் 12ம் முதல் நான்குநாட்களுக்கு இயக்கப்பட உள்ளது.
வரும், 15ம் தேதி, பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், பொங்கல் சிறப்பு பஸ் இயக்க போக்குவரத்து கழகம் தயாராகி வருகிறது.
திருப்பூர் கிளை 1 மற்றும், 2, காங்கயம், தாராபுரம், பழநி 1, பழநி 2, பல்லடம் கிளைகளில் இருப்பில் உள்ள பஸ்கள், எந்தெந்த பகுதிக்கு எவ்வளவு பஸ் இயக்க வேண்டும் என்ற இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கு, 510 பஸ்கள்;கோவில்வழியில் இருந்து மதுரை, தேனி, திருச்செந்துார், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு 895 பஸ்கள்; திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 595 பஸ்கள் என மொத்தம், 2,000 பஸ்கள் இயங்கும்.
வரும், 12, 13, 14 மற்றும், 15ம் தேதி சிறப்பு பஸ்கள் இயங்கும். கூட்ட நெரிசல் அதிகரிக்கும் என்பதால், வழக்கம் போல் கோவில்வழியில் இருந்து கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னையில் இருந்து திருப்பூர் திரும்புவோர் வசதிக்காக, வரும், 10ம் தேதி முதல் சென்னை, விழுப்புரம், சேலம், திருப்பூர் இடையே, 40 சிறப்பு பஸ்கள் இயங்கவுள்ளது. கூட்ட நெரிசலுக்கு ஏற்ப திருப்பூரில் இருந்தும் சென்னைக்கு சிறப்பு பஸ் அனுப்பப்பட உள்ளது.
கோவில்வழி, மத்திய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயங்கவுள்ள சிறப்பு பஸ்களை கண்காணிக்க, போக்குவரத்து கழக அதிகாரிகள், அலுவலர், பணியாளர் அடங்கிய, 48 பேர் கொண்ட இயக்க மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொது மேலாளர், வணிகம் மற்றும் டெக்னிக்கல் துணை பொது மேலாளர் தலைமையில் இக்குழுவினர் சுழற்சி முறையில் பணியில் இருப்பர். 13, 14ம் தேதி அதிகளவில் கூட்டம் வரும் என்பதால், அதற்கேற்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்பதிவு செய்யலாம்: பயணிகள் வசதிக்காக, திருப்பூரில் இருந்து சென்னை, நாகர்கோவில், திருநெல்வேலி, திருச்செந்துார், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூருக்கு டிக்கெட் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. மத்திய பஸ் ஸ்டாண்டில் செயல்படும் முன்பதிவு மையத்தில், டிக்கெட் முன்பதிவு செய்து, பயணிகள் தங்கள் இருக்கைகளை ஓரிரு நாள் முன்பாக உறுதி செய்து கொள்ளலாம். முன்பதிவில்லா சிறப்பு பஸ்களில் வழக்கமான கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்படும்.
- சுப்ரமணியம்: பொது மேலாளர்: அரசு போக்குவரத்து கழகம்:

