/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
46 அரசு சேவைகள் ஒரே இடத்தில் பெறலாம்
/
46 அரசு சேவைகள் ஒரே இடத்தில் பெறலாம்
ADDED : ஜூலை 15, 2025 11:10 PM

திருப்பூர்; 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், மாவட்டத்தில், நான்கு கட்டங்களாக நடக்கிறது.
முதல்கட்டமாக, 120 முகாம்கள், நேற்று முதல் துவங்கியுள்ளன; வரும் ஆக. 14ம் தேதி வரை நடைபெறுகிறது.
கன்னிவாடி, மூலனுார், தாராபுரம் பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை, அமைச்சர் கயல்விழி, கலெக்டர் மனிஷ் நாரணவரே பார்வையிட்டனர். முகாமில், பொதுமக்கள் பங்கேற்று, பல்வேறு சேவைகளுக்காக விண்ணப்பங்கள் அளித்தனர். பொது பிரச்னைகள், தனிநபர் பிரச்னைகளை குறிப்பிட்டு, மனுக்களும் அளித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதி, அங்கேரிபாளையம் ஜெகா கார்டன் திருமண மண்டபத்தில், நேற்று 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெற்றது. இதனை மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் அமித், ஆகியோர் துவக்கி வைத்து, திட்டத்தில் பயன் பெற்ற மக்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கினர்.
நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, எரிசக்தி துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட 13 துறை அதிகாரிகள் பங்கேற்று மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றனர்.
மகளிர் உரிமைத் தொகை பெற மனு கொடுக்க பெண்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முகாமில், மொத்தம், 2,200 மனுக்கள் பெறப்பட்டது. அதில் ஆயிரத்து 400 மனுக்கள் மகளிர் உரிமை தொகைக்காக அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், துணை மேயர் பாலசுப்பிரமணியம், முதலாம் மண்டல தலைவர் உமாமகேஸ்வரி, வடக்கு மாநகர தி.மு.க பொறுப்பாளர் தங்கராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
இன்றைய முகாம்
இரண்டாவது நாளான இன்று, காங்கயத்தில், பரஞ்சேர் வழி வில்லியகுல திருமண மண்டபம்; பொங்கலுாரில், அலகுமலை, என்.அவிநாசிபாளையம் ஊராட்சிகளுக்கு, அலகுமலையில் உள்ள ஸ்ரீ வேலன் மஹால்; குடிமங்கலத்தில், பெதப்பம்பட்டி எஸ்.எச்.ஜி., பில்டிங்; உடுமலையில், ஆலம்பாளையம், குறிச்சிக்கோட்டை, பள்ளபாளையம் பகுதிகளுக்கான முகாம், குறிச்சிக்கோட்டை வி.பி.ஆர்.சி., பில்டிங்கிலும் நடக்கிறது.