/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரேயொரு உதவியாளர் பணி 628 பேர் விண்ணப்பம்
/
ஒரேயொரு உதவியாளர் பணி 628 பேர் விண்ணப்பம்
ADDED : அக் 18, 2025 11:35 PM

அவிநாசி: அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் முதுநிலை பட்டதாரி, இன்ஜினியரிங் என முடித்தவர்கள் வரை, 628 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த பணிக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல, 18 வயது நிரம்பியவராகவும், 34 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என வயது வரம்பு வைக்கப்பட்டிருந்தது.
கோவை, திருப்பூர், ஈரோடு, நம்பியூர், கோபி, தாராபுரம், தென்காசி, மதுரை, திருநெல்வேலி, சென்னை என பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் இதற்காக விண்ணப்பித்திருந்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து தேர்வு, தமிழ் மொழியில் வாசிக்கும் மற்றும் எழுதும் திறன் என தேர்வுகள் நடைபெற்றது. அனைவரும் சைக்கிள் ஓட்டி காட்டினர்.
வரும், 27 முதல் நவ. 4ம் தேதி வரை நேர்முக தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொத்தம், 628 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 375 பேர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆணையாளர்கள் ஆறுமுகம், விஜயலட்சுமி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.