ADDED : அக் 19, 2025 02:47 AM
திருப்பூர்: அமெரிக்காவுக்கு நிறுத்தப்பட்ட தபால் சேவை மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் இருந்து செல்லும் தபால் மற்றும் பிற சேவைகளுக்கு அமெரிக்கா விதித்த அதிகளவு கட்டணத்தால், ஆக. 25 முதல் அந்நாட்டுக்கான தபால் சேவை நிறுத்தப்பட்டது. மத்திய தொலை தொடர்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து, 16ம் தேதி முதல் திருப்பூரில் இருந்து தபால் சேவை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசு, கூடுதல் சுங்க வரி விதித்ததுடன், அந்நாட்டுக்கு தபால் வாயிலாக வரும் பார்சல்கள் அனைத்துக்கும், முன்கூட்டியே சுங்கக் கட்டணம் வசூலிக்கும் வகையில், விதிகளில் மாற்றம் செய்தது. இதனால், கடந்த, ஆக. 25 முதல் நாடு முழுதும் இருந்து அமெரிக்காவுக்கு தபால் சேவை நிறுத்தப்பட்டது.மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் அமெரிக்காவுக்கு மீண்டும் தபால், பார்சல் சேவை துவங்க அறிவுறுத்தியுள்ளது. திருப்பூர் தலைமை தபால் அலுவலகம், தாராபுரம், மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதியில் இருந்தும், கடந்த, 16ம் தேதி முதல் தபால் சேவை துவங்கப்பட்டுள்ளது.