ADDED : டிச 25, 2024 07:26 AM

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், சின்னாத்திபாளையத்தில், 'கிளைரிசிடியா' உட்பட, 935 மரக்கன்றுகள் நடப்பட்டன.
வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மாவட்ட அளவில், 21 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகின்றன. அவற்றில், 18 லட்சம் கன்றுகள், மரமாக வளர்ந்துள்ளன.
மரக்கன்றுகளுக்கு, சொட்டுநீர் பாசன கட்டமைப்பை நிறுவி, தண்ணீர் பாய்ச்சி பராமரிப்பதால், 95 சதவீத மரக்கன்றுகள் மரமாக வளர்க்கப்படுகிறது. காய்ந்து போன்ற கன்றுகளுக்கு மாற்றாக, வேறு கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது.
'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டம், இதுவரை இல்லாத அளவுக்கு, மூன்று லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன் துவங்கியது; நேற்றைய நிலவரப்படி, 3.40 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளன. இலக்கை தாண்டிய வெற்றி பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், வெள்ள கோவில் அருகே சின்னாத்திபாளையத்தில் நேற்று மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. குணமூர்த்தி, விக்னேஸ்வரன் என்பவரின் தோட்டத்தில், சந்தனம் - 465, ' கிளைசிடியா' (மூடாக்கு மரம்) - 465, செம்மரம் - 5 என, 935 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.
'வனத்துக்குள்திருப்பூர்-10' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.