/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேரு 'புது' பஸ் ஸ்டாண்ட்! அடிப்படை வசதிகள் கூட இல்லை; அல்லல்படும் மக்கள் நிலை மாறலை
/
பேரு 'புது' பஸ் ஸ்டாண்ட்! அடிப்படை வசதிகள் கூட இல்லை; அல்லல்படும் மக்கள் நிலை மாறலை
பேரு 'புது' பஸ் ஸ்டாண்ட்! அடிப்படை வசதிகள் கூட இல்லை; அல்லல்படும் மக்கள் நிலை மாறலை
பேரு 'புது' பஸ் ஸ்டாண்ட்! அடிப்படை வசதிகள் கூட இல்லை; அல்லல்படும் மக்கள் நிலை மாறலை
ADDED : ஜூலை 20, 2025 10:38 PM

உடுமலை; உடுமலையில், புதிதாக கட்டப்பட்ட கூடுதல் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், பயணியருக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளது.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து புறநகர் பஸ்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து டவுன் பஸ்கள் என, 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், கடந்த, 2018ல், நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்ய, 3.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
நீண்ட இழுபறிக்கு பின், கூடுதல் பஸ் ஸ்டாண்ட் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், கடந்த மே மாதம், 29ம் தேதி, முதல்வரால் திறக்கப்பட்டது. இரு மாதத்துக்கு பின், கடந்த இரு நாட்களாக பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பழநி, பொள்ளாச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் கிழக்கு பகுதி கிராமங்களான, கணியூர், கடத்துார், மடத்துக்குளம், குமரலிங்கம் மார்க்கமாக செல்லும் டவுன் பஸ்கள் , கூடுதல் பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்படுகிறது.
ஆனால், பயணியருக்கான அடிப்படை வசதிகள் செய்யப்படாததால், கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பயணியர் அமர இருக்கை, ஓய்வறை என எந்த வசதியும் இல்லாமல், வணிக வளாகமாக உள்ளதால், பயணியர் தரையிலும், திட்டுக்களிலும் அமர்கின்றனர்.
மேலும், பயணியர் காத்திருக்கும் பகுதியில் மேற்கூரை இல்லாததால். வெயிலிலும், மழையிலும், பயணியரும், பள்ளி மாணவ, மாணவியரும் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. மேலும், குடிநீர் வசதியும் செய்யவில்லை.
பஸ் ஸ்டாண்டிற்குள் நுழையும் பகுதிகளில், ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பும், தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பும் அபரிமிதமாக உள்ளது இதனை ஒழுங்குபடுத்த வேண்டும்.
பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் எந்த பகுதியில் நிற்கின்றன, என்பது குறித்து உரிய அறிவிப்பு பலகைகள் வைக்கவும், போக்குவரத்து கழகம் சார்பில், வழிகாட்டி அதிகாரிகள் நியமிக்கவும் வேண்டும்.
ரோட்டில் ஆபத்து
தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டிற்கும், கூடுதல் பஸ் ஸ்டாண்டிற்கும் இடையே, ரவுண்டானா ரோடு சந்திப்பு பகுதிகள் உள்ளன. கூடுதல் பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் நிறுத்தி இயக்க துவங்கியுள்ள நிலையில், அதிவேகமாக வரும் வாகனங்களுக்கு மத்தியில் ரவுண்டானா வழியாக ரோட்டை ஆபத்தான முறையில் பயணியர் கடக்க வேண்டியுள்ளது. இதனால், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
கூடுதல் பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் பயணியர் ரோட்டை பாதுகாப்பாக கடக்கும் வகையில், இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரை உடனடியாக பணியில் நியமிக்க வேண்டும். இதர கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தினால் மட்டுமே விபத்துகளை தவிர்க்க முடியும்.