ADDED : ஜூலை 18, 2026 05:34 AM

திருப்பூர்: மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமாக, 'வீடு பட்டியல் கணக்கெடுப்பு'க்கான சுய ஆன்லைன் பதிவு நேற்று முதல் நாடு முழுவதும் துவங்கியது.
பொதுமக்கள் se.census.gov.in என்கிற பிரத்யேக இணையதளம் வாயிலாகத் தங்கள் வீடு சார்ந்த 33 கேள்விகளுக்குப் பதிலளித்துச் சுயமாகவே ஆன்லைனில் விவரங்களைப் பதிவு செய்யலாம்.
அதில், கிடைக்கும் 11 இலக்க அடையாள எண்ணை, வரும் ஆக. 1 முதல் 30-ம் தேதி வரை களப்பணியாளர்களிடம் வழங்கினால் போதும். தொடர்ந்து, 2027 பிப். மாதம் அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும்.
திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 3,800 பேர் இக்களப்பணிகளுக்காக டிஜிட்டல் தொழில்நுட்பப் பயிற்சிகளுடன் ஆயத்தமாக உள்ளனர்.
சம்பிரதாயம் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற சமூக நலத் திட்டங்களை வகுக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மிக அவசியமாகும். இதற்குப் பொதுமக்களின் பங்களிப்பு தேவை என்பதால் மத்திய அரசு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் எந்தவொரு விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் கலெக்டரின் வசதிக்காகக் கலெக்டர் அலுவலக அருகாமையிலேயே நடத்தி முடித்துவிடுவதை அதிகாரிகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
100 மீ. ஊர்வலம் நேற்று மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தைக் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் மனிஷ் நாரணவரே துவக்கி வைத்தார். எல்.ஆர்.ஜி. கல்லுாரி மாணவியர் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
ஆனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கிய இந்த ஊர்வலம், அதே வளாகத்தை ஒட்டியுள்ள கல்லுாரிக்குள்ளேயே, அதாவது வெறும் 100 மீட்டர் துாரத்திலேயே முடிந்தது. இதனால் பொதுமக்களுக்கு எந்தவொரு விழிப்புணர்வும் போய் சேரவில்லை.
