ஆட்டோ ஸ்டாண்ட் விவகாரம் பிரச்னைக்கு தீர்வு அவசியம்
ஆட்டோ ஸ்டாண்ட் விவகாரம் பிரச்னைக்கு தீர்வு அவசியம்
ADDED : ஏப் 28, 2025 04:17 AM
பல்லடம் : பல்லடத்தில், 80க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, பனப்பாளையம், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஸ்டாண்டுகள் உள்ளன. சிலர், புதிதாக ஆட்டோக்கள் இயக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கிடையே, ஏற்கனவே ஆட்டோ வைத்துள்ள சிலர், சம்பளத்துக்கு ஆள் நியமித்து ஆட்டோக்களை ஓட்டி வருவதாகவும், புதிதாக ஆட்டோ ஓட்ட வருபவர்களை அனுமதிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு மற்றொரு தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர்.
சில மாதங்கள் முன் தாலுகா அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. ஆட்டோ டிரைவர்கள் சிலர் தர்ணாவிலும் ஈடுபட்டனர். தற்போது மீண்டும் இப்பிரச்னை புகைகிறது. பஸ் ஸ்டாண்ட், கடை வீதி பகுதிகளில் தான் ஆட்டோவை நிறுத்த போட்டா போட்டி நிலவுகிறது. அமைதிப்பேச்சு நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியம்.
