/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி
/
கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி
ADDED : பிப் 14, 2024 11:57 PM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், புரூசெல்லோசிஸ் மூன்றாவது தவணை தடுப்பூசி, கால்நடைகளுக்கு இன்றுமுதல் செலுத்தப்படுகிறது.
புரூசெல்லோசிஸ் என்கிற நோய், பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு, மலட்டுத்தன்மை ஏற்படுத்துகிறது. புரூசெல்லா அபார்டஸ் என்கிற பாக்டீரியா இந்த நோயை ஏற்படுத்துகிறது. நோய் பாதித்த கால்நடைகளுக்கு தீவிர காய்ச்சல், கருச்சிதைவு ஏற்படுகிறது.
நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் சினை பிடிப்பதில் சிக்கல் காரணமாக, பால் உற்பத்தி குறைந்து, கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
இந்த நோய் தாக்கிய கால்நடையின் நஞ்சுக்கொடியை கையாளும்பட்சத்தில், மனிதர்களுக்கும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும்.
புரூசெல்லோசிஸ் கருச்சிதைவு நோயை தடுக்க, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம், கால்நடைகளுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், 4 மாதம் முதல் 8 மாதமான கிடாரி கன்றுகளுக்கு மட்டும், இன்று (15ம் தேதி) முதல் மார்ச் 15 வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
புரூசெல்லோசிஸ் தடுப்பூசி, கால்நடை நிலையங்கள் மூலம் நடைபெறும் முகாம்களில், இலவசமாக செலுத்தப்படும்.
காளை கன்றுகள், சினை மாடுகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தக்கூடாது என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

