/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றித்திரியும் கால்நடை; கட்டுப்படுத்த அதிரடி
/
சுற்றித்திரியும் கால்நடை; கட்டுப்படுத்த அதிரடி
ADDED : செப் 29, 2025 12:22 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்க செயற்குழு கூட்டம், கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடந்தது. கால்நடைத்துறை இணை இயக்குனர் சந்திரன் அருள்தாஸ், சங்கத்தின் துணை தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். பிராணிகள் வதை தடுப்பு சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
''காங்கயம், தாராபுரம் கால்நடை மருத்துவமனைகள், அவிநாசி கால்நடை மருந்தகம் பகுதிகளில், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
''ஆடு, மாடு, எருது ஆகியவற்றை, வாகனங்களில் கொண்டு செல்லும் போது, அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளால், மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதுகுறித்து உரிமையாளரிடம் அறிவுறுத்தி, கட்டுப்படுத்த வேண்டும்.
''நோய் பாதிப்பாலும், மக்களாலும் தெருநாய்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது, அவற்றை மீட்டு காப்பகங்களில் வைத்து பராமரிக்க வேண்டும். செல்லபிராணிகள் விற்கும் விற்பனையகங்கள், விலங்கு நலவாரியத்தில் உரிமம் பெற்று இயங்க அறிவுறுத்த வேண்டும்.
''வளர்ப்பு நாய்கள் துன்புறுத்துவது தெரியவந்தால், அவற்றை மீட்டு, அங்கீகரிக்கப்பட்ட காப்பகங்களில் சேர்க்க வேண்டும். கால்நடைத்துறை சார்பில், நாய்களுக்கு இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
பிராணிகள் வதை தடுப்பு சங்க உறுப்பினர்கள், தங்களது பணிகள் தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.