/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கழிவுகள் சேகரிக்க கூடுதல் பணியாளர்கள்
/
குப்பை கழிவுகள் சேகரிக்க கூடுதல் பணியாளர்கள்
ADDED : அக் 02, 2025 11:38 PM

திருப்பூர்:ஆயுத பூஜையையொட்டி திருப்பூரில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற, சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநகராட்சி கமிஷனர் அமித் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கைசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையையொட்டி, மாநகராட்சி பகுதியில் 60 வார்டு பகுதிகளிலும் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இதையொட்டி நடக்கும் நிகழ்வுகள் காரணமாக, வழக்கமாக சேகரமாகும் குப்பை கழிவுகளுடன் சேர்ந்து கூடுதல் கழிவுகளும் உருவாகிறது. இவற்றை, பொது மக்களுக்கும் பொது சுகாதாரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் அகற்ற வேண்டியுள்ளது. இதற்காக சிறப்பு குழுக்கள் அமைத்து, தேங்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இப்பணியில், 20 லாரிகள் மற்றும் 100 துப்புரவு பணியாளர்கள் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இப்பணியை மேற்பார்வையிட்டு கண்காணிக்க சுகதார அலுவலர் மற்றும் சுகதார ஆய்வாளர்கள் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழில் மற்றும் வர்த்தக நிறுவனத்தில் தங்கள் இடங்களில் உருவாகும் கழிவுகளை தங்கள் பகுதியில் தெரு முனைகளில் உள்ள குப்பைத் தொட்டிகள் கொண்டு சேர்க்க வேண்டும். இவற்றை சம்பந்தமில்லாத இடங்களில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீசக் கூடாது. மாநகராட்சி நிர்வாகத்துக்கு உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
---
பாக்ஸில் படம்
ஆயுத பூஜைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட வாழைக்கன்றுகளில் மீதமானவை, ரோட்டோரத்திலேயே வீசப்பட்டுள்ளன.
இடம்: கஜலட்சுமி தியேட்டர் ரோடு.