/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டெங்கு காய்ச்சல் தவிர்க்க அறிவுரை
/
டெங்கு காய்ச்சல் தவிர்க்க அறிவுரை
ADDED : அக் 07, 2025 11:48 PM
திருப்பூர்; 'மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், டெங்கு பரவும் வாய்ப்பு இருப்பதால், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பருவமழை தீவிரமடையும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேங்கி நிற்கும் நீரில் இருந்து உற்பத்தியாகும் ஏடிஸ் கொசுக்கள் வாயிலாக டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்பு இருப்பதால், கிராம ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் என, அரசின் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து குக்கிராமங்களிலும் ஒட்டுமொத்த துாய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
கிராம ஊராட்சிகளில், பிரதி மாதம், 5 மற்றும், 20ம் தேதி என, மாதமிரு முறை மேல்நிலை மற்றும் தரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும். குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீர் வினியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
தெளிந்த நீருள்ள தொட்டி, பயன்பாடற்ற பானைகள், குளிர்சாதன பெட்டியின் பின்புறம், பழைய டயர், தேங்காய் சிரட்டை, செடிகள்வளர்க்கும் தொட்டிமற்றும் புதிய கட்டுமான பணிகள் நடக்குமிடங்கள் மற்றும் பிற தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள இடங்களில், நீர் தேங்காமலும், அதன் வாயிலாக கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.