/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர் நிரம்பி ததும்பும் அமராவதி அணை படகு சவாரி நிறுத்தம்
/
நீர் நிரம்பி ததும்பும் அமராவதி அணை படகு சவாரி நிறுத்தம்
நீர் நிரம்பி ததும்பும் அமராவதி அணை படகு சவாரி நிறுத்தம்
நீர் நிரம்பி ததும்பும் அமராவதி அணை படகு சவாரி நிறுத்தம்
ADDED : டிச 27, 2024 11:07 PM

உடுமலை, ; உடுமலை அமராவதி அணை நிரம்பிய நிலையில் உள்ளதால், மீன் பிடிப்பு பாதித்துள்ளதோடு, படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நடப்பாண்டு, தென்மேற்கு பருவமழையால், ஜூலை, 18ல் அணை நிரம்பியது.
தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையால், கடந்த, நவ., 27ல் அணை நிரம்பியது. தொடர்ந்து, தற்போது பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர் மட்டம், நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 89.51 அடியாகவும், மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 4,002.77 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு, 263 கனஅடியாகவும், நீர் திறப்பு, 250 கனஅடியாகவும் இருந்தது.
அமராவதி அணை நீர் நிரம்பி ததும்பும் நிலையில், மீன் பிடிப்பு பாதித்துள்ளது. அணையில் மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில், திலேபியா, மிர்கால், ரோகு உள்ளிட்ட மீன் குஞ்சுகள் இருப்பு செய்து வளர்க்கப்பட்டு, மீனவர்கள் வாயிலாக பிடிக்கப்படுகிறது.
இதற்காக, தலா இரண்டு பேரை கொண்ட, 20 படகுகள், வலைகள் என 20 குழு மீனவர்கள் உள்ளனர். தற்போது, அணை நிரம்பிய நிலையில் காணப்படுவதோடு, பனிப்பொழிவு அதிகரித்து, குளிர் சீதோஷ்ண நிலையும் காணப்படுகிறது.
இதனால், இரவு நேரங்களில் மீன் பிடிக்கும் பணி தடைபட்டுள்ளது. காலை, 10:00 மணிக்கு துவங்கி, மாலை, 5:00 மணி வரை மட்டுமே, மீனவர்கள் வலை விரித்து மீன் பிடிக்கின்றனர். நீர் இருப்பு அதிகமாக உள்ளதால், குறைந்தளவு மட்டுமே மீன் சிக்குகிறது. வழக்கமாக, 300 கிலோ வரை மீன் கிடைத்து வரும் நிலையில், தற்போது, 100 கிலோவுக்கும் குறைவாகவே கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
பாதுகாப்புக்காக...
அமராவதி அணை சுற்றுலா தலமாக உள்ளதால், பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். வனத்துறை முதலை பண்ணை, அமராவதி அணை பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணியரை கவரும் வகையில், மகளிர் சுய உதவி குழு வாயிலாக, அமராவதி அணையில் படகு சவாரி செயல்படுத்தப்படுகிறது. பருவமழை பொழிவால், அணை நிரம்பிய நிலையில் உள்ளதால், சுற்றுலா பயணியர் பாதுகாப்பு கருதி கடந்த ஒரு மாதமாக, படகு சவாரியும் முடங்கியுள்ளது.

