/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆனந்த யாழை மீட்டுகிறாய்! மகள் என்னும் மகத்துவம்
/
ஆனந்த யாழை மீட்டுகிறாய்! மகள் என்னும் மகத்துவம்
ADDED : செப் 23, 2024 12:43 AM

முத்துக்குமரன் - முருக மணி தம்பதியருக்கு சபரிஸ்ரீ, ஹரிணி என இரட்டைப் பெண் குழந்தைகள். திருப்பூர் அம்மாபாளையத்தில் உள்ள பாத்திரப்பட்டறையில் தம்பதியர் பணிபுரிந்து வந்தனர்.
பத்தாண்டுகள் முன், முத்துக்குமரன் திடீரென இறந்துவிட, அவிநாசிக்கு மகள்களுடன் குடியேறினார் முருகமணி. தற்போது, அம்மாபாளையத்தில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் டெய்லராக பணிபுரியும் முருகமணி, சூளையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் மகள்களுடன் வசிக்கிறார்.
கணவனை இழந்தாலும் தன்னம்பிக்கை குறையாது, இரண்டு மகள்களையும் படிக்க வைத்தார். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் இருவரும் 484 மதிப்பெண்கள் பெற்று அசத்தினர்.
முருகமணி நம்முடன் பகிர்ந்தவை:
மாலை நேரங்களில் கிடைக்கும் வேலைக்குச் சென்று குடும்பத்திற்கான பொருளாதாரத்தை சேமிக்க துவங்கினேன்.
இரு பெண் குழந்தைகளும் என்னைப் போல கஷ்டப்படக் கூடாது என மனதில் வைராக்கியத்தை உருவாக்கினேன்.
நான் சிறுவயதாக இருக்கும்போதே என் தந்தையை இழந்தேன். என்னை ஆளாக்கி திருமணம் செய்து கொடுக்க என் தாய் கட்டட வேலை உள்ளிட்ட வேலைகள் பார்த்து சிரமப்பட்டார்.
நானும் கணவனை இழந்தபிறகு சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளானேன். மகள்கள் வாழ்க்கை, என் வாழ்க்கையை போல இருக்கக் கூடாது எண்ணி ஆங்கில வழிமுறையில் கற்பதற்காக அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தேன்.
கணவனை இழந்த பெண்ணிற்கு சமுதாயத்தில் நடைபெறும் கஷ்டங்களை எதிர்கொள்ளும் வாழ்வியல் நடைமுறைகளை என் இரு பெண்களுக்கும் கற்றுக் கொடுத்துள்ளேன்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் யாரிடமும் பொருளாதார தேவைக்காக கைகட்டி நிற்க வேண்டிய சூழல் ஏற்படக்கூடாது.
அதற்காகவே ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் கூட வீட்டில் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் துணிமணிகளை வாங்கி தைத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக்கொண்டு, மகள்களின் சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்து வருகிறேன்.
உயர் கல்விக்காக மட்டும் மகள்களுக்கு உதவி செய்ய வேண்டும் என மனதார நினைப்பவர்கள் உதவலாம்.
இவ்வாறு, முருகமணி கூறினார்.
என்னதான் அம்மா உன் ஆசை!
இரட்டையர் மகள்களில் மூத்தவரான சபரிஸ்ரீ கூறியதாவது:
எங்களுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அம்மா எந்த ஒரு ஆசையையும் கூறி கேட்டதில்லை. எங்களுக்காக மட்டுமே வாழ்ந்து வருகிறார். எப்போதும் வேலை மட்டுமே அவருக்குத் தெரியும். அந்த ஒரு காரணத்திற்காகவே நாங்கள் கஷ்டப்பட்டு படித்தோம். படித்து வருகிறோம்.
ஒவ்வொரு முறையும் எங்கள் அம்மா கூறுவதைப் போல, அவர்களைப் போல கஷ்டப்படாமல் உயர்ந்த படிப்பு படித்து, நல்லதொரு வேலையில் சேர வேண்டும். மிக முக்கியமாக, எதற்காகவும் எந்த ஒரு சூழ்நிலையிலும் பயப்படாமல் வாழ்க்கையை எதிர்கொள்ள பழக வேண்டும் என ஒவ்வொரு முறையும் அறிவுறுத்தி வருகிறார்.