/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., பிரதான கால்வாயில் திறக்கும் தண்ணீர் உப்பாறு போய் சேருமா? சீமைகருவேல மரங்கள் சூழ்ந்து மாயமான ஓடை
/
பி.ஏ.பி., பிரதான கால்வாயில் திறக்கும் தண்ணீர் உப்பாறு போய் சேருமா? சீமைகருவேல மரங்கள் சூழ்ந்து மாயமான ஓடை
பி.ஏ.பி., பிரதான கால்வாயில் திறக்கும் தண்ணீர் உப்பாறு போய் சேருமா? சீமைகருவேல மரங்கள் சூழ்ந்து மாயமான ஓடை
பி.ஏ.பி., பிரதான கால்வாயில் திறக்கும் தண்ணீர் உப்பாறு போய் சேருமா? சீமைகருவேல மரங்கள் சூழ்ந்து மாயமான ஓடை
ADDED : அக் 17, 2024 10:25 PM

உடுமலை : பி.ஏ.பி., பிரதான கால்வாய் வழியாக, உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பராமரிப்பு இல்லாமல், பரிதாபமாக உள்ள ஓடை வழியாக அணையை தண்ணீர் எட்டுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா கெத்தல்ரேவ் பகுதியில், உப்பாறு அணை அமைந்துள்ளது. அணை, 572 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாகும்; நேரடியாக, 6,060 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
போதிய நீர்ப்பிடிப்பு பகுதிகள் இந்த அணைக்கு இல்லை. பி.ஏ.பி., பாசனம் இரண்டு மண்டலமாக மட்டும் இருந்த போது, உப்பாறு ஓடை வழியாக, கசிவு நீர் அணைக்கு செல்லும்; அரசூர் ஷட்டர் வழியாகவும், பி.ஏ.பி., பிரதான கால்வாயில் தண்ணீர் சென்று வந்தது.
பி.ஏ.பி., நான்கு மண்டலமாக விரிவுபடுத்தப்பட்ட பிறகு, கசிவு நீர் செல்வது முற்றிலுமாக தடைபட்டு, உப்பாறு படுகை வறட்சிப்பகுதியாக மாறியது.
கடந்த சில ஆண்டுகளாக, குடிநீர் மற்றும் உயிர் தண்ணீர் அடிப்படையில், அப்பகுதி விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, பி.ஏ.பி., பிரதான கால்வாயில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
ஓடையில் போராட்டம்
தற்போது பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையில் தண்ணீர் சேகரிக்கப்பட்டு, இரண்டு சுற்று தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் சுற்றுக்காக பி.ஏ.பி., ஆயக்கட்டு விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், உப்பாறு பகுதி விவசாயிகள், அணைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, பொள்ளாச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வரும், 19ம் தேதி முதல் திருமூர்த்தி அணையிலிருந்து பிரதான கால்வாய் வழியாக, உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனர்.
பிரதான கால்வாயில், அரசூர் ஷட்டர் வழியாக, உப்பாறு ஓடையில், அணைக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஓடை 25க்கும் அதிகமான கி.மீ., தொலைவு அமைந்துள்ளது.
எவ்வித பராமரிப்பும் இல்லாமல், சீமைகருவேல மரங்கள் சூழ்ந்து, ஓடை இருப்பதே தெரியாத நிலை உள்ளது. மேலும், வழியோரங்களில், 40க்கும் அதிகமான தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
இதனால், பிரதான கால்வாயில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், உப்பாறு அணையை போய் சேருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
பல கட்ட போராட்டத்துக்கு பிறகு, தங்கள் பகுதிக்கு உயிர் தண்ணீர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள உப்பாறு விவசாயிகள், ஓடையின் நிலையால், அதிர்ச்சியில் உள்ளனர்.
பாசன நீரை கொண்டு செல்ல கால்வாய் உள்ளிட்ட கட்டமைப்புகள் இல்லாததது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
திட்டம் தேவை
உப்பாறு ஓடையை துார்வாரி, நீர் வரத்து பாதைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால், மழைக்காலத்தில், ஓடையில் நீரோட்டம் இருக்கும். கால்வாயில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் எளிதாக அணையை எட்டும்.
இதற்காக தொலைநோக்கு திட்டங்களை பொதுப்பணித்துறை வாயிலாக செயல்படுத்துவது அவசியமாகியுள்ளது.
முதற்கட்டமாக, நீரோட்டம் தடைபடாமல் இருக்க, சீமை கருவேல மரங்களை மட்டுமாவது அகற்றுவதற்கு பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.