/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பராமரிப்பின்றி வீணாகும் பேட்டரி வாகனங்கள்
/
பராமரிப்பின்றி வீணாகும் பேட்டரி வாகனங்கள்
ADDED : நவ 17, 2025 01:00 AM
உடுமலை: உடுமலை நகராட்சியில், துாய்மை பணிக்காக வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் பழுதாகி, பயன்படுத்தாமல் வீணாகி வருகிறது. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உடுமலை நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. துாய்மைப்பணியாளர்கள் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு சென்று, மக்கும் குப்பை, மக்காத குப்பை சேகரிக்கின்றனர்.
மக்கும் குப்பை, நுண் உரக்குடில்கள் வாயிலாக, உரமாக மாற்றப்பட்டும், மக்காத கழிவுகள் மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.
வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணிக்காக, 33 வார்டுகளுக்கு, 31 பேட்டரி வாகனங்கள் துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் வாயிலாக, நகரில் சுகாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பேட்டரி வாகனங்கள் பராமரிக்காமல், பழுதடைந்து வருகின்றன.
இவ்வாறு, பழுதான, 18 பேட்டரி வாகனங்கள் மாட்டுத்தொழுவம் மற்றும் நகராட்சி வளாகத்தில், பல மாதமாக வீணாக நிறுத்தப்பட்டுள்ளது. மழையிலும், வெயிலிலும் காய்ந்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேட்டரி வாகனங்கள் வீணாகி வருகிறது.
இதனை சரிசெய்ய வேண்டும் என, நகராட்சிக்கும், அதிகாரிகளுக்கும் துாய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், வீடுகள் தோறும் சென்று குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள துாய்மை பணியாளர்கள், தள்ளுவண்டிகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்கள் மிகுந்து சிரமத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, பேட்டரி வாகனங்களில் பழுது நீக்கி, முழுமையாக பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசும் இப்பிரச்னையில் தலையிட்டு, இதுகுறித்து உரிய தீர்வு காண வேண்டும் என நகர மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

