/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலியஸ்டர் துணிக்கழிவு எரிப்பதால் அச்சுறுத்தல்!: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரும்சவால்
/
பாலியஸ்டர் துணிக்கழிவு எரிப்பதால் அச்சுறுத்தல்!: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரும்சவால்
பாலியஸ்டர் துணிக்கழிவு எரிப்பதால் அச்சுறுத்தல்!: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரும்சவால்
பாலியஸ்டர் துணிக்கழிவு எரிப்பதால் அச்சுறுத்தல்!: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரும்சவால்
ADDED : மார் 14, 2026 06:09 AM

திருப்பூர்: பாலியஸ்டர் பின்னல் துணி 'கட்டிங்' வேஸ்ட்களை தீ வைத்து எரிப்பதால், சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபடும் அபாயம் உருவாகியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு பின், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி திருப்பூரில் வேகமெடுத்துள்ளது. வடமாநிலங்களில், பாலியஸ்டர் பின்னல் துணி உற்பத்தி எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதன்பயனாக, திருப்பூரில் உள்ள வியாபாரிகள், மொத்தமாக வாங்கி, விற்பனை செய்கின்றனர். பாலியஸ்டரில், சாயமிடப்பட்ட பின்னல் துணி கிடைப்பதால், மொத்தமாக வாங்கி உடனுக்குடன் வெட்டி ஆடை உற்பத்தியை துவக்க முடிகிறது; இதனால், குறு சிறு உற்பத்தியாளர்கள் அதிகம் வாங்கி, ஆடை உற்பத்தியை எளிதாக முடிக்கின்றனர். இது திருப்பூரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு ஊறுவிளைவிக்கும் சவால்களும் உள்ளன.
திருப்பூர் பின்னலாடை தொழில்துறை என்பது கற்பக விருட்சம் போன்றது; பனியன் நிறுவனங்களில் உருவாகும் ஒவ்வொரு கழிவுகளுக்கும் விலை கிடைத்தது; 'போம்' கழிவுகள் தவிர வேறு குப்பை எதுவும் இல்லை. பனியன் கட்டிங் வேஸ்ட் கூட, நுாலாக பிரித்து விற்கப்பட்டது. பாலியஸ்டர் துணியில் இருந்து உருவாகும், 'கட்டிங்' வேஸ்கள் எதற்கும் உபயோகமில்லாத சூழல் உருவாகியுள்ளது.
கழிவு துணியில் இருந்து, மெஷின்களை துடைத்து சுத்தம் செய்யக்கூட பயன்படுத்த இயலாது; இதன்காரணமாக, குறு, சிறு உற்பத்தியாளர்கள், மூட்டையாக கட்டி வைத்து, இரவு நேரங்களில் எடுத்துச்சென்று, நொய்யல் கரையோர ரோடுகள், மயானம் இருக்கும் இடங்கள், குப்பை கொட்டும் இடங்கள் என, ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் கொட்டிவிடுகின்றனர்.
மூட்டைகள் அதிகம் சேர்ந்ததும், சொல்லி வைத்தது போல், அனைத்து இடங்களிலும் தீ வைத்து எரிக்கப்படுகிறது. பாலியஸ்டர் கட்டிங் வேஸ்ட் துணிகளை, தீ வைத்து எரிக்கும் போது எழும் கரும்புகையால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி அதிகரித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதற்கு சாட்சியாக, பாலியஸ்டர் கட்டிங் வேஸ்ட்கள் ரோட்டோரமாக குவிக்கப்பட்டு, அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுகின்றன. தீ வைக்கும் போது, கரும்புகை எழுந்து, அருகே செல்பவர்களுக்கு மூச்சுத்திணறல் அளவுக்கு, நெடி வீசுகிறது. பாலியஸ்டர் பொருள் எரிவதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதேநிலை தொடர்ந்தால், கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து, இப்பிரச்னைக்கு தகுந்த தீர்வு காண வேண்டும். பாலியஸ்டர் கழிவுகளை அப்புறப்படுத்த சரியான வழிகாட்டுதல் வழங்க வேண்டும்,' என்றனர்.
பாலியஸ்டர் கட்டிங் வேஸ்ட்கள் ரோட்டோரமாக குவிக்கப்பட்டு, அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுகின்றன. தீ வைக்கும் போது, கரும்புகை எழுந்து, அருகே செல்பவர்களுக்கு மூச்சுத்திணறல் அளவுக்கு, நெடி வீசுகிறது

