/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூச்சிகளை கட்டுப்படுத்த வரப்பு பயிராக ஆமணக்கு
/
பூச்சிகளை கட்டுப்படுத்த வரப்பு பயிராக ஆமணக்கு
ADDED : ஜன 02, 2025 08:10 PM

உடுமலை; பிரதான பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, வரப்பு பயிராக ஆமணக்கு பயிரிடும் நடைமுறையை விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், பி.ஏ.பி., மற்றும் கிணற்றுப்பாசனத்துக்கு காய்கறி, மக்காச்சோளம், பருத்தி உட்பட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து வகை சாகுபடியிலும், பூச்சிகள் தாக்குதலால் பாதிப்பு ஏற்படுகிறது.
இதற்காக, பூச்சி கொல்லி மருந்துகளை அதிகளவு பயன்படுத்தாமல் கட்டுப்படுத்த, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில், பல்வேறு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
வேளாண்துறையினர் கூறியதாவது: அனைத்து சாகுபடிகளிலும், ஊடுபயிர், வரப்பு பயிர், வேலிப்பயிர், பொறி பயிர் என சில தாவரங்களை கட்டாயமாக, பயிர் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
கவர்ச்சி பயிராக ஆமணக்கு செடிகளை பராமரித்தால், அச்செடிகளின், அகன்ற இலைப்பரப்பில், புருட்டோனியா, பச்சைக்காய் புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகள், அசுவனி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சிகள் ஆகியவை ஈர்க்கப்படும்.
பின்னர், அதிகம் தாக்கப்பட்ட, ஆமணக்கு இலைகளை, தனியாக பிரித்து, முட்டை குவியல்களை எளிதாக அழிக்கலாம். இதனால், பிரதான பயிரில், பூச்சி கொல்லி மருந்து தெளித்தல் தவிர்க்கப்படுவதுடன், நோய் தடுப்பு பணியும் எளிதாகும்.
ஆமணக்கு, பூசண வித்துகளை காற்றின் வாயிலாக, பரவவிடாமல், தடுத்து, பயிருக்கு பாதிப்புகளை தவிர்க்கிறது. ஆமணக்கு விதைகளிலிருந்து பெறப்படும், ஆமணக்கு எண்ணெய் விற்பனை செய்ய சந்தை வாய்ப்புகளும் உள்ளன.
இவ்வாறு, அத்துறையினர் தெரிவித்தனர்.