ADDED : அக் 24, 2024 09:18 PM

உடுமலை: உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ், நேற்று நடந்த ஏலத்தில், ஒரு கிலோ ரூ.118.69க்கு விற்பனையானது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வியாழன் தோறும், இ - நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஏலத்திற்கு, உடுமலை, எலையமுத்துார், விளாமரத்துப்பட்டி, சின்ன வீரம்பட்டி, புக்குளம், கோட்டமங்கலம், குரல்குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 47 விவசாயிகள், 95 மூட்டை அளவுள்ள, 4,750 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இ - நாம் திட்டத்தின் கீழ் நடந்த மறைமுக ஏலத்தில், 6 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.
முதல் தரம், ரூ.114.59 முதல், ரூ.118.69 வரையும், இரண்டாம் தரம், ரூ.74.49 முதல், 112.16 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது. தொடர் மழை மற்றும் விலை குறைந்ததால், கொப்பரை வரத்து குறைந்து காணப்பட்டது.
ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு, கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
இ - நாம் திட்டத்தின் இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.