/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடிகளில் கல்வி நிறைவு சான்று!
/
அங்கன்வாடிகளில் கல்வி நிறைவு சான்று!
ADDED : ஜூன் 08, 2025 03:57 AM
திருப்பூர்: அங்கன்வாடி மற்றும் தொடக்கப்பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்க முன்பருவ கல்வி நிறைவு சான்று வழங்கப்படுகிறது.
அங்கன்வாடிகளில் குழந்தைகள் முன்பருவக்கல்வி பயில்கின்றனர். கல்வியை பொறுத்தமட்டில், வளர்ச்சி செயல்பாடு கண்டறியப்படுகிறது. அதாவது, 2 முதல் 3, 3 முதல் 4 மற்றும், 4 முதல் 5 என, வயது வாரியாக, மூளை, மனம், சமூகம், அறிவு மற்றும் மொழி வளர்ச்சி மதிப்பிடப்படுகிறது. அதிலும், குழந்தைகளின் திறமை, மூன்று மாதத்திற்கு ஒரு முறை, மூன்று ஆண்டுகளுக்கு ஆய்வு அட்டையில் பதிவு செய்யப்படுகிறது.
ஐந்து வயது பூர்த்தியான குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி, குழந்தைகளை அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
'அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளின் உடல் வளர்ச்சி, ஊட்டச்சத்து நிலை, கற்றல் திறன் மற்றும் சுகாதார நிலை ஆகியவை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வின் வாயிலாக, குழந்தைகளின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது பிரச்னைகள் இருந்தால், அவற்றை கண்டறிந்து உரிய உதவிகளை வழங்க முடிகிறது.
அதே போல, ஐந்து வயது பூர்த்தியாகி தொடக்கப்பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கப்படும். இதன் வாயிலாக, அங்கன்வாடி மையங்கள் மற்றும் தொடக்கப்பள்ளிகளில், குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலை குறைக்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளது' என, துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.