ADDED : அக் 30, 2024 12:09 AM

திருப்பூர் : உற்சவமூர்த்திகள் திருவீதியுலா சென்றுவர, உபயமாக வழங்கிய வாகனங்களை வெயில், மழையில் நிறுத்தி வீணடிக்கலாமா என, பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில், வைகாசி விசாக தேர்த்திருவிழா விமரிசையாக நடக்கும். காலை, மாலை என, உற்சவமூர்த்திகள் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். கோவில்களில், சுவாமி புறப்பாட்டுக்காக, இரும்பு சக்கரம் பொருத்திய, இரண்டு சப்பரம் பயன்பாட்டில் இருந்தது.
பாதுகாப்புடன், திருவீதியுலா சென்றுவர ஏதுவாக, 'டயர்' பொருத்திய வாகனங்கள் பக்தர்களால் செய்து கொடுக்கப்பட்டது. வாகனம் நிறுத்த பாதுகாப்பான இடவசதி இல்லாததால், தேர்நிலை அருகே, நிறுத்தப்பட்டுள்ளன.
வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்தபடி இருக்கும் சப்பரங்களை பார்த்து, பக்தர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர். பக்தர்கள் உபயமாக வழங்கிய, அந்த இரண்டு வாகனங்களும், பாதுகாப்பாக நிறுத்த, சிறிய 'ெஷட் அமைக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், வாகனங்களை, பெருமாள் கோவில் வளாகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும்.

