/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கவில்லை
/
துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கவில்லை
ADDED : ஜன 03, 2026 05:32 AM
உடுமலை: உடுமலை நகராட்சியில் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள துாய்மை பணியாளர்களுக்கு போதிய உபகரணங்கள் வழங்காததால், கடுமையாக பாதித்து வருகின்றனர்.
உடுமலை நகராட்சியில், 17 ஆயிரத்து, 526 வீடுகள், 1,038 வணிக நிறுவனங்கள் உள்ளன. நகராட்சியில், நாள் ஒன்றுக்கு, 28 டன் குப்பை சேகரமாகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், உபயோகிப்பாளர்களுக்கு குப்பை வரி நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
நகராட்சியிலுள்ள, 230க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் வாயிலாக, வீடுகள், வணிக நிறுவனங்களில் நேரடியாக குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்கப்படுகிறது. இதற்காக, துாய்மை பணியாளர்களுக்கு, சிவப்பு, பச்சை என பல்வேறு வண்ணங்களில், பிளாஸ்டிக் டிரம்கள் வழங்கப்பட்டன.
திட்டம் துவங்கிய போது, பல ஆண்டுகளுக்கு முன், வழங்கப்பட்டது. தொடர் பயன்பாடு காரணமாக, அவை உடைந்தும், பயனின்றி வீணாகியுள்ளது. புதிதாக மாற்றித்தராத நிலையில், உடைந்த பிளாஸ்டிக் டிரம்களை பயன்படுத்துவதால், வீடுகளில் சேகரிக்கும் கழிவுகள் சிதறி வருவதோடு, துாய்மை பணியாளர்களுக்கு டிரம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல், நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட தள்ளுவண்டிகளும், முறையாக பராமரிப்பு இல்லாமல், உடைந்து, அவற்றை பயன்படுத்த முடியாமல் அவர்கள் பாதித்து வருகின்றனர். எனவே, துாய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

