/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்தையில் கடைகள் கட்டுமான பணி இழுபறி; நெரிசலில் தவிக்கும் மக்கள்
/
சந்தையில் கடைகள் கட்டுமான பணி இழுபறி; நெரிசலில் தவிக்கும் மக்கள்
சந்தையில் கடைகள் கட்டுமான பணி இழுபறி; நெரிசலில் தவிக்கும் மக்கள்
சந்தையில் கடைகள் கட்டுமான பணி இழுபறி; நெரிசலில் தவிக்கும் மக்கள்
ADDED : ஜூன் 08, 2025 10:15 PM
உடுமலை ; உடுமலை சந்தை வளாகத்தில், கடைகள் கட்டுமான பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகள், பொதுமக்கள் பாதித்து வருகின்றனர்.
உடுமலை நகராட்சி, சந்தை வளாகம், 16.14 ஏக்கரில் அமைந்துள்ளது. நுண் உரக்குடில், ஆடு வதைக்கூடம் என சந்தை வளாகம் குறுகலாக மாறியுள்ளது. தற்போது சந்தையில், 34 கமிஷன் கடைகள் மற்றும் 314 நிரந்தர கடைகள் உள்ளன.
உடுமலை சுற்றுப்பகுதிகளில் விளையும், தக்காளி, தேங்காய், வெங்காயம், முருங்கை, கத்தரி, வெண்டை என தினமும், 700 டன் வரை காய்கறிகள் வரத்து வருகிறது.
உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலம், மறையூர், மூணாறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்து, காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர். தினசரி சந்தையில், காய்கறி வாங்க, பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.
தரைக்கடைகளில் அமர்ந்து, வியாபாரிகள் விற்பனை செய்வதை தவிர்க்கும் வகையில், பழைய கடைகளை புதுப்பிக்கவும், புதிய கடைகள் அமைக்கவும் வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், 6.84 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
தற்போதுள்ள ராஜேந்திரா ரோடு வணிக வளாகத்திற்கு இணையாக, சந்தை வளாகத்திற்குள் கடைகள் கட்டுமான பணி நடந்தது. ஒரு பகுதியில் மட்டும் கடைகள் கட்டப்பட்ட நிலையில், மீதம் உள்ள பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
கட்டப்பட்ட கடைகளும், பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. இடித்த கட்டட கழிவுகள், கட்டுமான பொருட்கள் மற்றும் பணிகள் காரணமாக, சந்தை வளாகம் மேலும் குறுகலாக மாறியுள்ளது.
இதனால், விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர். விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை, இறக்கி வைத்து விற்பனை செய்ய முடியாமலும், வாகனங்கள் உள்ளே வர முடியாத நிலை என போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
எனவே, கட்டுமான பணி விரைந்து முடிக்கவும், சந்தை வளாகத்தில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளான, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும், என பொதுமக்கள் வலிறுத்தியுள்ளனர்.