/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலங்கி நிற்கும் கட்டுமானத்துறையினர்
/
கலங்கி நிற்கும் கட்டுமானத்துறையினர்
ADDED : டிச 12, 2024 11:50 PM

திருப்பூர்; எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி ரகங்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் விலை உயர்வைக் கண்டித்து கட்டுமானத் துறையினர் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்; கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் கிரஷர்களில் உற்பத்தி செய்யப்படும், எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி ரகங்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் யூனிட்டுக்கு ஆயிரம் முதல் 1,200 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்துப் பகுதியிலும் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, விலை உயர்வை திரும்ப பெறுதல்; இந்தக் கனிம வளங்களை அத்தியாவசியப் பொருள் பட்டியலில் சேர்த்தல்; விலை நிர்ணயம் செய்து அரசு அறிவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினர் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காலை கொட்டும் மழையில், கட்டுமானத் துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அகில இந்திய கட்டுநர் சங்கம்; திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன்; திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்கம்; ரெடிமிக்ஸ் கான்கிரீட் அசோசியேசன்; தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம்; பிளை ஆஷ் பிரிக்ஸ் அண்ட் பிளாக்ஸ் உற்பத்தியாளர் சங்கம்; ஹாலோ பிளாக் உற்பத்தியாளர் சங்கம்; மாநகராட்சி ஒப்பந்தாரர் சங்கம் மற்றும் ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு - புதுச்சேரி கட்டுமான பொறியாளர் கூட்டமைப்பு உள்ளிட்டவற்றின் நிர்வாகிகள் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டமைப்பு நிர்வாகிகள் தங்கள் கோரிக்கை குறித்த மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.
----
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று கட்டுமானத்துறையைச் சேர்ந்த பல்வேறு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

