/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டுறவு பணியாளர்கள் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்
/
கூட்டுறவு பணியாளர்கள் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 15, 2025 11:42 PM
திருப்பூர்; ரேஷன் கடைகளுக்கு கழிப்பிட வசதி உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, 28ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்குமென, கூட்டுறவு பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) நிர்வாகக்குழு கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரேஷன் கடைகளை தனித்துறையாக அறிவிக்க வேண்டும், ரேஷன் கடைகளுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கடையில் உள்ள 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகளை உடனுக்குடன் சரிசெய்து, தாமதமின்றி பொருட்கள் வழங்க வேண்டும்.
வயது முதிர்ந்தவர்களுக்கு, கைவிரல் ரேகை பதிவு செய்ய முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. தாலுகா அல்லது கிராமங்கள் வாரியாக சிறப்பு முகாம் நடத்தி, முதியோரின் கைவிரல் ரேகை பதிவை அப்டேட் செய்து கொடுக்க வேண்டும்.
ரேஷன் கடைகளின், தேவை பட்டியல் பெற்று, அதற்கேற்ப மளிகை பொருட்களை அனுப்ப வேண்டும், காலாவதியான பொருட்களை உடனுக்குடன் திரும்பப்பெற வேண்டும். 'ஒரே நாடு ஒரே கார்டு' திட்டத்தில், வெளிமாவட்ட மக்களுக்கு தடையின்றி வழங்க ஏதுவாக, கூடுதல் ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
எடையை சரிபார்த்து, பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும், கடைகளுக்கு, அளவையாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். அனைத்து ரேஷன் கடை பணியாளருக்கும், சம்பள ரசீது மற்றும் காப்பீடு அட்டை வழங்க வேண்டும்.
சமூக ஆர்வலர் என்ற பெயரில், ரேஷன் கடைகள் மீது அவதுாறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டுறவு பணியாளர் சங்கத்தின் முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி, 28ம் தேதி, கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.