/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுால் விலை உயர்வால் காடா துணி தேக்கம்
/
நுால் விலை உயர்வால் காடா துணி தேக்கம்
ADDED : மார் 18, 2026 09:14 PM

பல்லடம்: நுால் விலை உயர்வு காரணமாக, பல்லடத்தில், விசைத்தறி காடா துணிகள் தேக்கமடைந்து வருகின்றன.
இது குறித்து, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க துணைத் தலைவர் சக்திவேல் கூறியதாவது:
சமீப நாட்களாக, கழுவுப் பஞ்சு விலை ஏற்றத்தை தொடர்ந்து, நுால் விலையும் கிலோவுக்கு, 8 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால், துணிகளின் அடக்க விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. துணி விலையை உயர்த்தினால், சந்தையில் போட்டி போட முடியாது. மேலும், கூலி அடிப்படையில் நடந்து வரும் தொழிலில், ரொக்கப் பரிவர்த்தனை தான் பெரும்பாலும் நடந்து வருகிறது.
தேர்தல் கட்டுப்பாடுகளால், பணப் பரிவர்த்தனை குறைந்துள்ளது. இத்துடன், இம்மாதம் ஆண்டுக் கணக்கு முடிவு என்பதாலும், புதிய துணி ஆர்டர்கள் வருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களால், காடா துணி விற்பனை பாதிக்கப்பட்டு, துணி தேக்கமடைய துவங்கியுள்ளது. எனவே, விசைத்தறி தொழில் பாதிக்காத வகையில், பஞ்சு நுால் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

