/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறிப்பிட்ட ஊராட்சிகளில் ஆடுவதை கூடம் அமைக்கணும்
/
குறிப்பிட்ட ஊராட்சிகளில் ஆடுவதை கூடம் அமைக்கணும்
ADDED : ஜன 26, 2024 11:23 PM
உடுமலை: ஊராட்சிகளில், ஆடுவதைக்கூடம் அமைக்க, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், பல லட்சம் ரூபாய் செலவில், நவீன ஆடுவதை கூடங்கள் கட்டப்பட்டுள்ளது. இறைச்சிக்காக தேர்வு செய்யப்படும் ஆடுகள் முந்தைய நாள், வதை கூடத்தில் சேர்க்கப்படும்.
அடுத்த நாள், கால்நடை டாக்டர்கள், இறைச்சிக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகளைப் பரிசோதித்து, 'நலமாக உள்ளது' என, தெரிவித்தால் மட்டுமே, இறைச்சிக்காக ஆடுகள் வதை செய்யப்படும்.
பின், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் உள்ள டாக்டர்கள், பரிசோதனை செய்து, சீல் வைத்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.
பெரும்பாலான இறைச்சிக்கடைக்காரர்கள், இதுபோன்ற விதிகளைப் பின்பற்றுவது கிடையாது.
இதேபோல், உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களிலும், ஆடுவதைக்கூடம் இல்லாததால், திறந்தவெளியில், அவை வதை செய்யப்படுகின்றன.
தரமான இறைச்சி கிடைப்பதை உறுதி செய்ய முடியாமல் பலரும், பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சிகளிலும் ஆடுவதைக்கூடம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மக்கள் கூறுகையில், 'குறிப்பிட்ட கிராமங்களுக்கு ஒரு ஆடுவதை கூடம் அமைக்க வேண்டும். இதற்கு, ஒன்றியம் வாயிலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதன் வாயிலாக, திறந்தவெளியில் கால்நடைகள், வதை செய்யப்படுவதும், நோய் பாதித்த இறைச்சி விற்பனையும் தடுக்கப்படும்,' என்றனர்.

