/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கட்டடம் காலி செய்ய காலக்கெடு; கல்வி அலுவலகத்துக்கு சோதனை
/
கட்டடம் காலி செய்ய காலக்கெடு; கல்வி அலுவலகத்துக்கு சோதனை
கட்டடம் காலி செய்ய காலக்கெடு; கல்வி அலுவலகத்துக்கு சோதனை
கட்டடம் காலி செய்ய காலக்கெடு; கல்வி அலுவலகத்துக்கு சோதனை
ADDED : மார் 16, 2026 07:31 AM

பல்லடம்: சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஒன்றியத்துக்கு உட்பட்டு, 70க்கும் மேற்பட்ட அரசு துவக்க நடுநிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகள் அனைத்தும், சுல்தான்பேட்டை வட்டார கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
பல ஆண்டுகளாக, வட்டார கல்வி அலுவலகத்துக்கு சொந்த கட்டடம் கிடையாது. ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்த கட்டடம் தற்போது தேவைப்படுவதால், உடனடியாக காலி செய்து தருமாறு, பி.டி.ஓ., கெடு விதித்துள்ளார்.
சுல்தான்பேட்டை வட்டார ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
கடந்த காலத்தில், வாடகை கட்டடத்தில்தான் வட்டார கல்வி அலுவலகம் செயல்பட்டு வந்தது. பின்னர், சேதமடைந்து கிடந்த மகளிர் திட்ட அலுவலக கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இந்த கட்டடத்தை சீரமைத்து, நல்ல நிலையில் கல்வி அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது, கட்டடத்தை காலி செய்யுமாறு பி.டி.ஓ., கெடு விதித்துள்ளார்.
அலுவலக ஆவணங்கள், கணினி, பள்ளி குழந்தைகளுக்கான அரசு திட்ட உதவிப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும், வட்டார கல்வி அலுவலகங்களில் தான் பராமரிக்கப்படுகின்றன.
திடீரென, அலுவலகத்தை காலி செய்யுமாறு கூறுவதால், எங்கு செல்வது, இவற்றையெல்லாம் எங்கு கொண்டு செல்வது என்றே தெரியவில்லை.
மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் கண்டுகொள்ளாமல் உள்ளன. கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள இந்த அவலம், வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது.

