/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தைக்கு சிகிச்சை தொடர்பான தகராறு; தாய்மாமன் கொலை: உறவினர் கைது
/
குழந்தைக்கு சிகிச்சை தொடர்பான தகராறு; தாய்மாமன் கொலை: உறவினர் கைது
குழந்தைக்கு சிகிச்சை தொடர்பான தகராறு; தாய்மாமன் கொலை: உறவினர் கைது
குழந்தைக்கு சிகிச்சை தொடர்பான தகராறு; தாய்மாமன் கொலை: உறவினர் கைது
ADDED : ஜூலை 11, 2025 06:56 AM
திருப்பூர்; திருப்பூரில், நாய் கடித்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட தகராறில், தாய்மாமனை கத்தியால் குத்தி கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், பி.என்., ரோடு, குமரானந்தபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி, 31, டிரைவர். இவரது தங்கை பிரியாவின், ஒன்றரை வயது பெண் குழந்தை வீட்டின் முன் நேற்று முன்தினம் இரவு விளையாடி கொண்டிருந்தது.
அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய், குழந்தையை கடித்தது. உடனடியாக குழந்தையை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
குழந்தையை நாய் கடித்தது குறித்து அறிந்து, இரு குடும்பத்தினர், உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். குழந்தையை பார்க்க தாய்மாமன் கருப்பசாமி, குழந்தையின் தந்தை கார்த்திகேயனின் அக்கா கணவர் குலசிவேலு உள்ளிட்டோர் வந்தனர். அப்போது, 'குழந்தையை எதற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தீர்கள், தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டியதுதானே,' என கருப்பசாமி கேள்வி எழுப்பி தகாத வார்த்தையில் பேசினார்.
இதனை கேட்ட, குலசிவேல், ''நாய்க்கடிக்கு, அரசு மருத்துவமனையில் தான் நன்றாக சிகிச்சை அளிப்பார்கள்,'' என கூறினார். உடனே, இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டது. கருப்பசாமி, குலசிவேலுவை தாக்கினார். இதனால், ஆத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால், கருப்பசாமியின் கழுத்தில் குத்தினார்.
ரத்தம் கொட்ட சரிந்து விழுந்த அவருக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். கருப்பசாமியை கொலை செய்த, ஊத்துக்குளியை சேர்ந்த குலசிவேலை, 51 திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.

