/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.9 கோடியில் மாவட்ட நுாலகம்! கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைகிறது
/
ரூ.9 கோடியில் மாவட்ட நுாலகம்! கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைகிறது
ரூ.9 கோடியில் மாவட்ட நுாலகம்! கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைகிறது
ரூ.9 கோடியில் மாவட்ட நுாலகம்! கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைகிறது
UPDATED : பிப் 14, 2026 12:15 PM
ADDED : பிப் 14, 2026 05:56 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்துக்கென புதிய மாவட்ட மைய நுாலகம் கட்ட, ஒன்பது கோடி ரூபாய் நிதி வழங்கி, அரசு ஒப்புதலும் வழங்கியுள்ளது.
திருப்பூர், பார்க் ரோட்டில், மாவட்ட மைய நுாலகம் உள்ளது. பொது நுாலகத்துறை, 50 ஆண்டுகள் முன் நிறுவிய திருப்பூரின் முதல் நுாலகம் இது. தினமும், நுாற்றுக்கணக்கான வாசகர்கள் வந்து செல்கின்றனர். போட்டித்தேர்வுக்கு தயாராகும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், இளைஞர்களும் பயனடைகின்றனர்.
மாவட்ட மைய நுாலகம் என்பதால், பொது நுாலகத்துறை சென்னையில் இருந்து அனுப்பி வைக்கும் புத்தகங்கள் இங்கிருந்து தான் எட்டு தாலுகா நுாலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இடநெருக்கடியால், புத்தக குடோனை போல் செயல்பட்டு வந்தது. தினசரி நாளிதழ், வாரம் இருமுறை, மாதாந்திர புத்தக வாசிப்புக்கு வருவோர் நெருக்கடியாக சிறிய இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை இருந்தது.
இந்நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட் எதிரில், காலியாக உள்ள, 75 சென்ட் இடத்தை வழங்க வேண்டும். அதில், மூன்று தளங்களுடன் விரிவுபடுத்தப்பட்ட மாவட்ட மைய நுாலகம் கட்ட, ஒன்பது கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது என, மாவட்ட நிர்வாகம், பொது நுாலகத்துறைக்கு கடந்தாண்டு நவ. மாதம் கருத்துரு அனுப்பப்பட்டது.
கடந்த பிப். முதல் வாரத்தில் புதிய மாவட்ட மைய நுாலகம் கட்ட ஒன்பது கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கி, நிதி ஒதுக்கிய அரசு, அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது.
விரைவில் கட்டுமானப்பணி திருப்பூர் மாவட்ட மைய நுாலக அலுவலர் ராஜன் கூறுகையில், ''கருத்துருவை ஏற்று கேட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை வாயிலாக கட்டுமான பணிகளுக்கான டெண்டர் நடக்கும். புதிய விரிவுபடுத்தப்பட்ட மாவட்ட மைய நுாலகம் கட்டுவதற்கு, பூமி பூஜை விழா விரைவில் நடைபெறும்,'' என்றார்.
மாணவர்கள் மகிழ்ச்சி கலெக்டர் அலுவலக நான்காவது தளத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளது. பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இங்கு பயிற்சியளிக்கப்படுகிறது. வார நாட்கள் மட்டுமின்றி, விடுமுறை நாட்களில் கூட கல்லுாரி மாணவ, மாணவியர், போட்டி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர் பலர் படித்து பயன் பெறுகின்றனர். கலெக்டர் அலுவலக ஒருங்கிணைந்த வளாகத்திலேயே, விரிவுபடுத்தப்பட்ட மாவட்ட மைய நுாலகம் கட்டப்படுவதால், மாணவ, மாணவியர் பெரும் பயன் அடைவர்.

