/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருவமழைக்கு தயாராகும் மரக்கன்றுகள் மாவட்ட சிறப்பு குழு ஆய்வு
/
பருவமழைக்கு தயாராகும் மரக்கன்றுகள் மாவட்ட சிறப்பு குழு ஆய்வு
பருவமழைக்கு தயாராகும் மரக்கன்றுகள் மாவட்ட சிறப்பு குழு ஆய்வு
பருவமழைக்கு தயாராகும் மரக்கன்றுகள் மாவட்ட சிறப்பு குழு ஆய்வு
ADDED : ஏப் 24, 2025 10:28 PM
உடுமலை; உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட போடிபட்டி நாற்றுப்பண்ணையில், மரக்கன்றுகள் தயார்நிலையில் இருப்பது குறித்து, மாவட்ட நிர்வாக குழுவினர் ஆய்வு நடத்தினர். தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தில், ஊராட்சிகளில் மரக்கன்று வளர்ப்பு திட்டமும் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது. அரசின் சார்பில், இதற்கான நாற்றுப்பண்ணைகள் அமைப்பதற்கு, நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நியமிக்கப்படும் பணித்தள பொறுப்பாளர்கள், இந்த பண்ணைகளை மேற்பார்வையிட்டு, பணிகளை கவனிக்கின்றனர். உடுமலை ஒன்றியத்தில், போடிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டிற்கு, 9 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடுமலை ஒன்றியத்தில், நடப்பாண்டில், 35 ஆயிரம் மரக்கன்றுகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது நாற்றுப்பண்ணையில் வேம்பு, பூவரசம், நாவல் மரம், புங்கன், நெல்லி, புளியம், எலுமிச்சை, மாதுளை, சீதாப்பழம், பலா மரம், பாதாம், பப்பாளி உட்பட 31ஆயிரம் கன்றுகள் உள்ளன.
வழக்கமாக மரக்கன்றுகள் இரண்டு அடி வளர்ந்ததும், தொடர்ந்து வினியோகிக்கப்படும். ஆனால், நடப்பாண்டில் மரக்கன்றுகள் நன்றாக குறைந்தபட்சம் 5 அடி வளர்ந்த பின் மட்டுமே வினியோகிக்க வேண்டுமென, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி மாவட்ட நிர்வாகத்திலிருந்து சிறப்பு குழுவினர், நாற்றுப்பண்ணையில் மரக்கன்றுகள் வளர்ப்பு குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். ஜூன் மாதம் வரை தொடர்ந்து பராமரித்து, பருவ மழையையொட்டி மரக்கன்றுகளை வினியோகிக்கவும், மாவட்ட நிர்வாக அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

