/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'விருந்து என்ற பெயரில் வேண்டாம் ஸ்லோ பாய்சன்'
/
'விருந்து என்ற பெயரில் வேண்டாம் ஸ்லோ பாய்சன்'
ADDED : ஜூலை 27, 2025 11:39 PM

பல்லடம்; தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டு இயக்கம், வனத்துக்குள் திருப்பூர், பல்லடம் வனம் அமைப்பு இணைந்து, இரண்டாம் ஆண்டு விதைகள் மற்றும் உணவு திருவிழாவை, பல்லடம் அருகே, அருள்புரத்தில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தியது.
இதில், சொற்பொழிவாளர் அனந்தகிருஷ்ணன் பேசியதாவது:
மரங்களும், செடிகளும்தான் நம் மூதாதையர்கள். விதை என்ற சொல்லுக்கு மரத்தினுடைய கரு என்று பொருள். உருவாகும் எல்லா விதையும் அவற்றின் தாயிடம் இருந்தே வருவதால், அவை துாய்மையாகவே வருகின்றன. நாம்தான் அவற்றின் மரபணுவை மாற்றி அசுத்தமாக்கி வருகிறோம். பாரம்பரிய உணவையும் உணர்வையும் மறந்துவிட்டோம்.
இன்று நடக்கும் திருமணங்களில் 'உணவு வன்முறை' நடக்கிறது. எல்லாரையும் திருமணத்துக்கு அழைத்து, விருந்து என்ற பெயரில் 'ஸ்லோ பாய்சன்' கொடுக்க வேண்டாம்.
வீட்டில் உண்ணக்கூடிய உணவுக்கு விஞ்ஞானம் என்றும்; கோவில் உணவுக்கு மெய்ஞ்ஞானம் என்றும் பெயர்.
உடலில் மஜ்ஜைக்கு பிரச்னை என்றால் எந்த மருத்துவராலும் சரி செய்ய முடியாது. உயிரை உற்பத்தி செய்யக்கூட தாதுவை எந்த மருத்துவத்தாலும் உற்பத்தி செய்ய முடியாது. இது துாய்மையாக இருந்தால்தான் அடுத்து வரும் சந்ததி ஆற்றலுடன் ஆரோக்கியத்துடன் இருக்கும். அடுத்த தலைமுறை பிணி மிக்க தலைமுறையாக இருக்கக் கூடாது. மாசடைந்த உலகத்தை மாற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.