ADDED : செப் 27, 2025 12:01 AM
திருப்பூர்; ஓட்டுநர் உரிமத்தை உரியவருக்கு அனுப்பாமல் மாற்றி அனுப்பிய குளறுபடி நடந்துள்ளது.
திருப்பூர், லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவுசாத் அலி, 35. ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஓட்டுநர் உரிமம் ஸ்மார்ட் கார்டு பதிவு தபாலில் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
நவுசாத் அலிக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து பதிவு தபால் வந்தது. அதில், எஸ்.பெரியபாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி, 73 என்பவரின் ஓட்டுநர் உரிம 'ஸ்மார்ட் கார்டு' இருந்தது.
வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து பதிவு தபாலில் நேரடியாக, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று, தகுதிச் சான்று போன்ற ஆவணங்கள் அனுப்பி வைக்கும் நடைமுறை தற்போது பின்பற்றப்படுகிறது.
தினமும் பல்வேறு விதமான சான்றுகளை அலுவலகத்திலிருந்து வழங்கினாலும், அவற்றை உடனுக்குடன் அனுப்பி வைப்பதில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தபால் சேர்ந்தவுடன் தான் அவற்றை அனுப்பி வைக்கின்றனர்.
இதுபோல் ஒட்டு மொத்தமாக தபால்கள் சேர்ந்து அனுப்பும் போது இதுபோன்ற தவறுகள் சகஜமாக ஏற்படுகிறது. எனவே, இதுபோன்ற செயல்களை தடுக்க, உரிய கண்காணிப்பு மேற்கொண்டு தபால்கள் அனுப்பப்பட வேண்டும். தேக்கி வைக்காமல் உடனுக்குடன் தினமும் தயாராகும் சான்றுகளை அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
