/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பறவைகள் சரணாலயம் அருகே சுற்றுச்சூழல் சீர்கேடு
/
பறவைகள் சரணாலயம் அருகே சுற்றுச்சூழல் சீர்கேடு
ADDED : ஜூலை 20, 2025 11:14 PM

திருப்பூர்; நல்லாற்றின் நிறைவாக அமைந்துள்ள நஞ்சராயன் குளம், 400 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
குளத்தில், ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்குவதாலும், ஆட்கள் நடமாட்டம் குறைவு என்பதாலும், பறவைகள் அதிகம் வசிக்கின்றன. வெளிநாட்டு பறவைகள் வலசை வந்து, நான்கு மாதங்கள் இங்கு தங்கி செல்வது வழக்கம்.
பறவை ஆர்வலர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கு பிறகு, பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
குளக்கரையில் பொதுமக்கள் அத்துமீறி நுழையக் கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அறிவிப்பு பலகையில், குளத்து நீரில், பாலிதீன் காகிதங்கள், ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியும் தண்ணீர் பாட்டில்கள் மிதப்பது போலவும், பறவைகள் பாதிக்கப்படுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
'குடி'மகன்கள், விடுமுறை நாட்களில் கூட்டமாக சென்று மது அருந்தும் இடமாக இருந்து வந்த அணைக்கட்டு பகுதியில், இன்றும் இத்தகைய அத்துமீறல் நடக்கிறது.
இந்நிலையில், அருகே உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் சேகரமாகும் குப்பைகள், அவ்வப்போது, கூலிபாளையம் ரோட்டில், குளம் அருகே கொட்டப்படுகிறது.
இதன் காரணமாக, நஞ்சராயன் குளத்துக்கு மிக அருகே உள்ள விவசாய நிலங்களில், பயிர் செய்தது போல் பாலிதீன் காகிதங்கள் பரவிக்கிடக்கின்றன.
உடனடி
நடவடிக்கை தேவை
இதேநிலை தொடர்ந்தால், நஞ்சராயன் குளத்தை சுற்றியுள்ள பகுதியிலும் சுற்றுச்சூழல் மற்றும் பறவைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பறவைகள் சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் சுகாதாரசீர்கேட்டை தடுக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, குளத்தை சுற்றியுள்ள பகுதிகளை சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- பொதுமக்கள்.