/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இறந்தும் மக்கள் இதயங்களில் வாழ்கிறார்!: ஐந்து பேருக்கு கிடைத்த மறுவாழ்வு சாகாவரம்' பெற்ற சத்யநாராயணன்
/
இறந்தும் மக்கள் இதயங்களில் வாழ்கிறார்!: ஐந்து பேருக்கு கிடைத்த மறுவாழ்வு சாகாவரம்' பெற்ற சத்யநாராயணன்
இறந்தும் மக்கள் இதயங்களில் வாழ்கிறார்!: ஐந்து பேருக்கு கிடைத்த மறுவாழ்வு சாகாவரம்' பெற்ற சத்யநாராயணன்
இறந்தும் மக்கள் இதயங்களில் வாழ்கிறார்!: ஐந்து பேருக்கு கிடைத்த மறுவாழ்வு சாகாவரம்' பெற்ற சத்யநாராயணன்
ADDED : ஜன 05, 2025 02:18 AM

'நல்லா தானே இருந்தான்; நேத்து கூட பேசினானே. இத்தன நாள்ல மருந்து, மாத்திரை சாப்பிட்டது கிடையோதே. சத்தி உனக்கு என்ன என்ன ஆச்சு...' மொத்த குடும்பத்தினர் கதறல் மருத்துவமனை சுவர்களில் எதிரொலித்தது. தம்பி, அக்கா, தங்கை என எட்டு பேருடன் பிறந்த சத்திநாராயணனுக்கு இப்படி ஒரு மரணம், அதுவும் இவ்வளவு சின்ன வயதில் வரும் என்பதை யாரும் சற்றும் எண்ணிப்பார்க்கவில்லை என்பது, கண்ணீர் வற்றிப்போன அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினரின் கண்களில் காண முடிந்தது.
திருப்பூர், செவந்தம்பாளையம், பண்ணாரியம்மன் நகரை சேர்ந்தவர், சத்யநாராயணன், 43. குமரானந்தபுரத்தில் பனியன் லேபிள் பிரின்டிங் நிறுவனம் நடத்தி வந்தார். மனைவி உஷா நந்தினி, 41. மகள் ஸ்ரீ பிரித்திகா, 24.
புத்தாண்டுக்கு முதல் நாள் (டிச., 31) இரவு, 10:30 மணிக்கு, வீட்டிலுள்ள முதல் தளத்துக்கு சென்ற சென்ற சத்யநாராயணன், கால் தடுமாறி கீழே விழுந்தார். வெளியூருக்கு புறப்பட்டு சென்ற மனைவிக்கு இப்படியொரு இடிவிழுந்தது போன்ற தகவல் கிடைத்ததும், மின்னல் வேகத்தில் வீட்டுக்கு சென்றார். அதற்குள் அவரை அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழு,' தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது; மூளைச்சாவு உறுதியாகி விட்டது,' என தெரிவித்துள்ளனர். இருப்பினும், குடும்பத்தினர், 'ஒரு நாள் காத்திருக்கலாமே...' என மருத்துவர்கள் கூறியதில் சமாதானமாகினர். ஆனால், கால(ன்)ம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பதற்கேற்ப, அவருக்கு நினைவுகள் திரும்பவில்லை. மூளைச்சாவு உறுதியானது.
இதனால், சத்யநாராயணன் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெரிய மனதுடன் குடும்பத்தினர் முன்வந்தனர். அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் உதவி நாடப்பட்டது. மருத்துவக் கல்லுாரி டீன் முருகேசன், கண்காணிப்பாளர் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு டாக்டர் குழு உருவாக்கப்பட்டது. மூளைச்சாவு அடைந்த சத்தியநாராயணன் கல்லீரல் கோவை உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று ஈரோட்டுக்கும், மற்றொன்று கோவைக்கும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது. கண்கள் இரண்டும் அரவிந்த் கண் மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த உடல் உறுப்பு தானம் மூலம் ஐந்து பேர் மறுவாழ்வு பெற்றனர்.
இதனை தொடர்ந்து, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சத்தியநாராயணன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், 'டீன்' முருகேசன் மற்றும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். செவிலியர் பயிற்சி பள்ளி, மருத்துவ மாணவியர் வழிநெடுகிலும் நின்று, சத்தியநாராயணம் உடல் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கைகூப்பி வணங்கி நன்றி தெரிவித்தனர்.
--------
பாசப்பிணைப்பாக ஒரு கூட்டு பறவைகளாக வளர்ந்து வந்தவர்களில், குடும்பத்தில் ஒருவர் தவறி விட்டால், அக்குடும்பமே ஒரு நிமிடம் நிர்கதியாகி விடும், நிகழ்வில் இருந்து அவ்வளவு எளிதில் மீண்டு வந்து விட முடியாது என்பதற்கான நிகழ்வாக நேற்றைய காட்சிகள் அமைந்தது.
---------------------------
பட விளக்கம்
----------
தம்பிக்கு பிரியாவிடை கொடுத்த சகோதரி...
----------------------------------
மூளைச்சாவு அடைந்த சத்யநாராயணனின் உடல் உறுப்புகளால், ஐந்து பேர் மறுவாழ்வு பெற்றனர். அவரின், உடல் திருப்பூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டது. இறுதியாக தம்பியின் முகத்தை காண, வீல்சேரில் கண்ணீர் மல்க சென்ற அவரின் சகோதரியை பார்த்து, 'ராயல் சல்யூட்' அடித்த செக்யூரிட்டியின் செயல், அருகில் இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இருப்பினும், குடும்பத்தினர், 'ஒரு நாள் காத்திருக்கலாமே...' என்று மருத்துவர்கள் கூறியதில் குடும்பத்தினர் சமாதானமாகினர். ஆனால், கால(ன்)ம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பதற்கேற்ப, அவருக்கு நினைவுகள் திரும்பவில்லை. மூளைச்சாவும் உறுதியானது
- நமது நிருபர் -