/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடைக்கால ஆர்டருக்கு மாறிய ஏற்றுமதியாளர்கள்
/
கோடைக்கால ஆர்டருக்கு மாறிய ஏற்றுமதியாளர்கள்
ADDED : நவ 09, 2025 11:33 PM
திருப்பூர்: கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆர்டர்கள் அனுப்பிய பிறகு, கோடைக்கால ஆர்டர் மீதான உற்பத்தி, திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களில் துவங்கியுள்ளது.
நம் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளும், பருத்தி நுாலிழை உள்ளாடைகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தற்போது வங்கதேசத்தின் தரைவழி போக்குவரத்து ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டு சந்தைகள் சாதகமாக மாறியுள்ளன. குறிப்பாக, தீபாவளி ஆர்டர்கள், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, திருப்பூரில் புதிய வசந்தத்தை ஏற்படுத்தியதாக, விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
புதிய ஆர்டர் வரத்து எப்போது? பரபரப்பான தீபாவளி ஆர்டர் முடிந்த பிறகு, உற்பத்தியும், வர்த்தகமும் மந்தமாகியுள்ளது. மழை மற்றும் குளிர் பருவம் என்பதால், நாடு முழுவதும் உள்ளாடைகள் விற்பனை மந்தமாகியுள்ளது; இதனால், புதிய ஆர்டர் வரத்து துவங்கவில்லை.
மழை மற்றும் குளிர்காலங்களில் பயன்படுத்தும், உல்லன் போன்ற ஆடைகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, தீபாவளிக்கு பிறகு, உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள், உல்லன் போன்ற கெட்டியான பின்னல் துணியில் ஆடை தயாரிக்கும் ஆர்டர்களை பெற்று, உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர்.
கோடைக்கால விற்பனை, பிப்., மாதத்துக்கு பிறகே துவங்கும்; அதன் பிறகுதான், திருப்பூருக்கான ஆர்டர்களும் அதிகம் வரத்துவங்கும் என, உற்பத்தியாளர் கூறுகின்றனர்.
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தை பொறுத்தவரை, தீபாவளி நேரத்தில், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆர்டர்கள் முக்கியமானவை. அதன்படி, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆர்டர்கள் அனுப்பும் பணியும் நிறைவு பெற்றுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து கோடைக்கால ஆர்டர் வரத்து துவங்கிவிட்டது. வழக்கமாக, இந்தியாவின் பருத்தி நுாலிழை பின்னலாடைகளுக்கு, வெளிநாடுகளில் வரவேற்பு அதிகம். குறிப்பாக, கோடைக்கால ஆர்டர்கள்தான் அதிகம் திருப்பூருக்கு கிடைக்கிறது. அதன்படி, புதிய கோடைக்கால ஆர்டர் உறுதியானதும், உற்பத்தியை துவக்க, ஏற்றுமதி நிறுவனங்களும் ஆயத்தமாகி வருகின்றன.

