/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானியத்தில் தீவனப்புல் விதை விவசாயிகள் கோரிக்கை
/
மானியத்தில் தீவனப்புல் விதை விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஏப் 01, 2025 10:34 PM
உடுமலை ;தென்மேற்கு பருவமழை சீசனில், கால்நடை வளர்ப்புக்கு உதவும், தீவனப்புல் விதைகளை மானியத்தில் வினியோகிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்தி மற்றும் இதர தேவைகளுக்காக, 60 ஆயிரத்திற்கும் அதிகமான மாடு மற்றும் எருமைகள் வளர்க்கப்படுகின்றன.
பால் உற்பத்தியை அதிகரிக்க, பருவமழை துவங்கும் முன்பு, கால்நடைத்துறை சார்பில், தீவனப்புல் வளர்ப்பிற்கான இடுபொருட்கள் பயனாளிகளுக்கு வினியோகிக்கப்படும்.
தீவனப்புல் வளர்ப்பு திட்டத்தில், சோளம், அசோலா, ஊறுகாய்புல் சாகுபடிக்கு, தேவையான விதை மற்றும் இதர இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட்டது.
விளைநிலங்களில், மழை நீர் தெளிப்பான் அமைக்கவும், கால்நடை கிளை நிலையம் மற்றும் மருந்தகம் வாயிலாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மானிய திட்டத்தை செயல்படுத்தினர்.
கடந்த சில ஆண்டுகளாக இத்தகைய மானியத்திட்டத்துக்கு, கால்நடைத்துறையில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.
விவசாயிகள் கூறுகையில், 'பால் உற்பத்தியை அதிகரிக்க, தீவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேய்ச்சல் நிலங்கள் வெகுவாக குறைந்துள்ளது; விளைநிலங்களிலும் களைக்கொல்லி பயன்பாடு அதிகரித்துள்ளதால், பசுந்தீவன தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, தீவன உற்பத்திக்கான விதைகளை வரும் மழை சீசனில் மானியத்தில் வழங்க வேண்டும்' என்றனர்.

