/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொத்தமல்லி சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம்
/
கொத்தமல்லி சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம்
ADDED : பிப் 06, 2025 08:44 PM
உடுமலை; கிணற்றுப்பாசனத்துக்கு, கொத்தமல்லி தழை சாகுபடியில், ஈடுபட உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், கிணற்று பாசனத்துக்கு, காய்கறி சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது.
இதில், ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும், கொத்தமல்லி தழை சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது. குறைந்த தொழிலாளர் தேவை மற்றும் சாகுபடி செலவு பிடிப்பதால், மூன்று சீசன்களில், இச்சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக முகூர்த்த சீசனை இலக்காக வைத்து, விதைப்பு செய்கின்றனர். சீதோஷ்ண நிலை சீராக இருந்தால், ஏக்கருக்கு, 7-10 டன் வரை தழை விளைச்சல் இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சில வியாபாரிகள் நேரடியாகவே விளைநிலங்களிலேயே வந்து, தழையை அறுவடை செய்து கொள்வதால், ஆட்கள் தேவை குறைவாகவே உள்ளது.
இருப்பினும், அதிக வெப்பம் நிலவினால், போதிய விளைச்சல் கிடைக்காது; சாகுபடி பரப்பு அதிகரித்தால், வரத்து அதிகரித்து விலை சரிவது இச்சாகுபடியில், முக்கிய பிரச்னையாக உள்ளது. கடந்த சீசனில், மழைப்பொழிவால் சாகுபடி பாதித்து, தழைக்கு போதிய விலை கிடைக்கவில்லை.
மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் சீரான விலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

