/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழை இன்றி வறண்ட குளங்கள் கவலையில் விவசாயிகள்
/
மழை இன்றி வறண்ட குளங்கள் கவலையில் விவசாயிகள்
ADDED : நவ 02, 2025 03:21 AM

பொங்கலுார்: திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வானம் பார்த்த பூமியாகும். மானாவாரி நிலங்களில் விவசாயிகள் மாட்டு தீவனத்திற்காக கம்பு, சோளம் மற்றும் பயறு வகைகள் போன்றவற்றை சாகுபடி செய்கின்றனர்.
அக்டோபரில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. பல இடங்களில் புரட்டாசி பட்ட விதைப்புக்கே போதுமான மழை பெய்யவில்லை.
அவ்வப்போது பெய்த சிறிதளவு மழையை பயன்படுத்தி விவசாயிகள் விதைப்பு பணியை மேற்கொண்டனர். வழக்கமாக தீபாவளி சமயத்தில் நல்ல மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு அதுவும் இல்லை. மழை நாட்கள் மிகவும் குறைந்துவிட்டது.
ஐப்பசி மாதத்தில் அடை மழை பெய்யும். மழை பெய்ய வேண்டிய நேரத்தில் கடுமையான வெயில் வாட்டுகிறது.
தற்போது மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்துள்ள சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் மழையின்றி வாடி வருகின்றன.
பருவ மழையின் போது குளம், குட்டைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். நிலத்தடி நீரை நம்பி அடுத்த போக சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வர். ஆனால், பல குளங்கள் தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கின்றன. மலை மேற்கொண்டு மழை இல்லாவிட்டால் சாகுபடி செய்துள்ள பயிர் களையே அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், குளங்களுக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் அடுத்த போக சாகுபடியும் கேள்விக்குறியாகி உள்ளது. இது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

