/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலவச தொகுப்பு வீடு; கலெக்டரிடம் மனு
/
இலவச தொகுப்பு வீடு; கலெக்டரிடம் மனு
ADDED : ஜன 09, 2025 11:39 PM

திருப்பூர்; பல்லடம் தாலுகா செங்கோடப்பாளையம், கிருஷ்ணாபுரம் பகுதி மக்கள் நேற்று, இலவச தொகுப்பு வீடு வழங்க கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
பல்லடம் தாலுகா செங்கோடப்பாளையம், கிருஷ்ணாபுரம் பகுதியில், 15 குறவர் இன குடும்பங்கள், பல ஆண்டுகளாக வசித்துவருகிறோம். வாடகைக்கு ஓட்டு வீடுகளில் குடியிருந்துவரும்நிலையில், மழைக்காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மழை வெள்ளம் சூழ்ந்து, இருக்க இடம் இல்லாத நிலைக்கு தள்ளப்படுகிறோம். மிக குறைந்த வாடகையுள்ள சில வீடுகள் இடியும் நிலையில் உள்ளன.
எங்கள் பொருளாதாரம், குழந்தைகளில் கல்வி பாதிக்கப்படுவதால், தொடர்ந்து பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படுகிறோம். அரசு வழங்கும் திட்டங்களும் எங்களுக்கு முழுமையாக கிடைப்பதில்லை. தமிழக அரசு, குறவர் சமூக மக்களுக்கு இலவச வீட்டுமனையும், தொகுப்பு வீடுகளும் வழங்கி, எங்கள் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.