/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளர் முதல் தொழில்முனைவோர் வரை 'சைபர்' குற்றவாளிகளிடம் சிக்கும் பரிதாபம்
/
தொழிலாளர் முதல் தொழில்முனைவோர் வரை 'சைபர்' குற்றவாளிகளிடம் சிக்கும் பரிதாபம்
தொழிலாளர் முதல் தொழில்முனைவோர் வரை 'சைபர்' குற்றவாளிகளிடம் சிக்கும் பரிதாபம்
தொழிலாளர் முதல் தொழில்முனைவோர் வரை 'சைபர்' குற்றவாளிகளிடம் சிக்கும் பரிதாபம்
ADDED : ஆக 02, 2024 05:33 AM

திருப்பூர் : திருப்பூரில், பின்னலாடை தொழில்முனைவோர் முதல் தொழிலாளர் வரை அனைத்துதரப்பினரும், வெவ்வேறு வகைகளில், 'சைபர்' குற்றவாளிகளின் வலையில் சிக்குகின்றனர்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தில்(சைமா) நடந்த கருத்தரங்கில், மோசடி ஆசாமிகளின் வலையில் விழாமல் தற்காத்துக்கொள்வது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விரிவான விளக்கம் அளித்தனர்.
புதுப்புது வழிகளில் ஏமாற்றும் யுத்தி
திருப்பூர் மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் செண்பகவள்ளி கூறியதாவது:
சைபர் குற்றங்கள் நாளுக்குள்நாள் அதிகரித்துவருகின்றன. முன்பு, வடமாநிலத்தவர்கள் போல் பேசி, கிரெடிட் கார்டு எண் மற்றும் ஓ.டி.பி., கேட்டு வந்தனர். தற்போதோ, வெவ்வேறு வழிகளில் மோசடி ஆசாமிகள் வலைவிரிக்கின்றனர்.
' ரிவார்டு பாய்ன்ட்' வழங்குவதாக 'லிங்க்' அனுப்பி, கிரெடிட் கார்டில் உள்ள தொகையை கபளீகரம் செய்கின்றனர். ஆன்லைன் பொருட்கள் வாங்கினால் சிக்கிவிடுவோம் என ஆசாமிகள் தெரிந்துகொண்டனர். இப்போதெல்லாம், மோசடி செய்யும் தொகையை, துபாய் கரென்ஸியாக மாற்றி, எடுத்துக்கொள்கின்றனர்.
ரூ.3 லட்சம் கடன் பெற ரூ.3.15 லட்சம் பறிபோனது
கடன் தருவதாக கூறி செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது, மொபைல் போனில் உள்ள அனைத்து தகவல்களையும் திருடிவிடுவர். போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து, நண்பர்களுக்கு பகிர்வதாக கூறி, பணம் கேட்டு மிரட்டுவர். பெண் ஒருவர் 3 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 3.15 லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ளார். கடன் கேட்கும் நம்மிடமிருந்து ஏன், கடன் கொடுப்பவர் தொகை கேட்கிறார் என்கிற சிந்தனை கூட பலருக்கு இல்லை.
சிறிய தொகைக்கு மயங்கினால் பெரிய தொகை காலியாகும்
வங்கிகளுக்கு செல்ல தயங்கி, ஆன்லைனிலேயே கே.ஒய்.சி., அப்டேட் செய்கிறோம். இவர்களில் பலர், ஹேக்கர்களின் வலையில் தங்களை சிக்கவைத்துக்கொள்கின்றனர். பகுதி நேர வேலை என கூறி, 100 ரூபாயில் துவங்கி மூவாயிரம் ரூபாய் வரை படிப்படியாக சிறிய தொகைகளை செலுத்தக்கோருவர்; ஒவ்வொரு நிலையிலும் நாம் செலுத்துவதைவிட, கூடுதல் தொகை வழங்கி, நம்பிக்கையை ஏற்படுத்துவர். இறுதியில், லட்சக்கணக்கான ரூபாயை செலுத்தக்கோரி, சுருட்டிவிட்டு தலைமறைவாகிவிடுகின்றனர். சமூக வலைதளங்களிலிருந்து போட்டோ மற்றும் விவரங்களை பெற்று, போலி கணக்கு உருவாக்கி, நட்பு வட்டத்தில் உள்ளவர்களிடம் பணம் கேட்பதும் பரவலாகிவருகிறது.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள், உலகளாவிய வர்த்தகர்களுடன் தொடர்புவைத்துள்ளனர். ஆடைக்கான தொகை, ஏதோ ஒரு வங்கி கணக்கிலிருந்து நமக்கு வந்து சேர்ந்துவிட்டது என நினைக்கக்கூடாது. ஒருவேளை அந்த தொகை, யாரேனும் ஒருவருக்கு மோசடி வலைவிரித்து, அதன்மூலம் உங்களுக்கு அனுப்பப்பட்டதாக கூட இருக்கலாம். வர்த்தக தொடர்பு வைத்துள்ள நிறுவன கணக்கிலிருந்து தொகை பெறுவதே பாதுகாப்பானது.