UPDATED : ஆக 31, 2026 09:47 PM
ADDED : ஆக 31, 2026 08:54 PM
திருப்பூர்:''திருப்பூர் மாநகர பகுதியில் மொத்த கழிவு உற்பத்தியாளர்களிடம், இன்று முதல் மாநகராட்சி நேரடியாக குப்பை சேகரிக்காது'' என கமிஷனர் அமித் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருப்பூர் மாநகர பகுதியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன் படி, தூய்மைப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில், நகரில் தேங்கியிருந்த 25,500 மெட்ரிக் டன் குப்பைகள் (3,816 லோடு) முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. அப்பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டு, மீண்டும் குப்பை கொட்டாத வகையில் பராமரிக்கப்படுகின்றன.
பிரித்து வழங்குங்கள்
வீடுகள், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவு, சிறப்பு கவனக் கழிவு என 4 வகையாக பிரித்து வழங்க வேண்டும்.
ஈரக்கழிவு மற்றும் சுகாதாரக் கழிவு தினமும் பெறப்படும். மக்காத உலர் கழிவு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், சிறப்பு கவனக் கழிவு சனிக்கிழமையும் பெறப்படும்.
நேரடி சேகரிப்பு இல்லை
நாளொன்றுக்கு 100 கிலோவுக்கு மேல் கழிவு உருவாக்கும் நிறுவனங்கள், 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் வளாகம் கொண்ட நிறுவனங்கள் அல்லது 40 ஆயிரம் லிட்டருக்கு மேல் தண்ணீர் பயன்படுத்தும் நிறுவனங்கள், மொத்த கழிவு உற்பத்தியாளர்களாக கருதப்படுவர்.
இவர்களிடம் இன்று முதல் மாநகராட்சி நேரடியாக குப்பை சேகரிக்காது. அவர்கள் தங்கள் வளாகத்திலேயே கழிவுகளை செயலாக்க வேண்டும். அல்லது மாநகராட்சி அங்கீகரித்த ஒப்பந்ததாரர்களிடம் கிலோவுக்கு அதிகபட்சம் ரூ.2 கட்டணம் செலுத்தி ஒப்படைக்க வேண்டும்.
24 மணி நேர கண்காணிப்பு
பொது இடங்களில் குப்பை கொட்டுதல், அனுமதியின்றி போஸ்டர், பேனர் ஒட்டுவதை தடுக்க 8 சிறப்பு அமலாக்க குழுக்கள் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடும். நகரின் 40 முக்கிய இடங்களில் ஏ.ஐ. கேமராக்கள் பொருத்தப்பட்டு, விதிமீறல்கள் கண்காணிக்கப்படுகின்றன.
விதிகளை மீறுவோர் மீது மின்சாரம், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன், மாநகராட்சி வணிக உரிமமும் ரத்து செய்யப்படும். மாநகரை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள், வணிகர்கள், தொழில் அமைப்புகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
