/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறந்த வெளியில் குவியும் கழிவு கேள்விக்குறியாகும் சுகாதாரம்
/
திறந்த வெளியில் குவியும் கழிவு கேள்விக்குறியாகும் சுகாதாரம்
திறந்த வெளியில் குவியும் கழிவு கேள்விக்குறியாகும் சுகாதாரம்
திறந்த வெளியில் குவியும் கழிவு கேள்விக்குறியாகும் சுகாதாரம்
ADDED : செப் 19, 2024 10:02 PM
உடுமலை: உடுமலை ஒன்றியம் குரல்குட்டை ஊராட்சியில், குப்பைக்கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தாமல் தீ வைத்து எரிக்கப்படுகிறது.
உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட குரல்குட்டை ஊராட்சியில், மடத்துார் மற்றும் மலையாண்டிபட்டணம் கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் இருநுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
கிராமங்களில் குப்பைக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதற்கு, திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தில், வீடுகளில் துாய்மைப்பணியாளர்கள் கழிவுகளை சேகரித்து, அவற்றை உரக்குழிகளில் கொட்ட வேண்டும்.
மக்கும் கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பதும், மக்காத குப்பைக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் பல ஊராட்சிகளில், கழிவுகள் தொடர்ந்து கிராமங்களின் எல்லைப்பகுதிகளில் திறந்த வெளியில் கொட்டப்படுகின்றன. குரல்குட்டை ஊராட்சியிலும் இதே அவலம் தொடர்கிறது.
குப்பைக்கழிவுகள் மலையாண்டிபட்டணம் உயர்மட்ட பாலம் அருகே உள்ள, திறந்த வெளியில் கொட்டப்படுகிறது. கொட்டப்படுவதுடன், கழிவுகளுக்கு தீ வைத்து எரிக்கப்படுகிறது.
ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுவதில்லை. துாய்மைப்பணியாளர்கள் பற்றாக்குறையால், ஏற்கனவே உள்ள பணியாளர்களுக்கும் பணிச்சுமை அதிகரிக்கிறது.
இதனால் துாய்மைப்பணிகளை மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட உரக்குடில்களும் எந்த பயன்பாடும் இல்லாமல் உள்ளது.
கிராமங்களில் திறந்த வெளியில் கழிவுகள் கொட்டப்படுவதை தவிர்க்க, திடக்கழிவு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.