ADDED : ஜன 30, 2025 07:27 AM

அவிநாசி; அவிநாசி ஒன்றியம், கருவலுார் ஊராட்சி, தொட்டக்களம்புதுார் பகுதியில், பீஹார் மாநிலம்,முஜாப்பூர் மாவட்டம், பஸ்தான் பூர் பகுதியைச் சேர்ந்த ராஜு ஷானி 32, அவரது மனைவி கவிதா தேவி, 31 ஆகியோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு நிகிதா, 9 மற்றும் 6, 4 ஆகிய வயதில் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
நேற்று மாலை, வீட்டில் கவிதா தேவி துாங்கிக் கொண்டிருந்தபோது, தனது தம்பிகளுக்கு விளையாட்டு காட்டுவதற்காக தொட்டிலில் தனது துப்பட்டாவை கட்டி நிகிதா சுற்றிச்சுற்றி வந்துள்ளார்.
அப்போது எதிர்பாராமல் கழுத்து இறுகி மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள், நிகிதாவை அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

