/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
1,100 விநாயகர் சிலைகள் அணிவகுத்த பிரமாண்ட ஊர்வலம்; பலத்த பாதுகாப்புக்கிடையே மாநகரில் கோலாகலம்
/
1,100 விநாயகர் சிலைகள் அணிவகுத்த பிரமாண்ட ஊர்வலம்; பலத்த பாதுகாப்புக்கிடையே மாநகரில் கோலாகலம்
1,100 விநாயகர் சிலைகள் அணிவகுத்த பிரமாண்ட ஊர்வலம்; பலத்த பாதுகாப்புக்கிடையே மாநகரில் கோலாகலம்
1,100 விநாயகர் சிலைகள் அணிவகுத்த பிரமாண்ட ஊர்வலம்; பலத்த பாதுகாப்புக்கிடையே மாநகரில் கோலாகலம்
UPDATED : ஆக 31, 2025 08:21 AM
ADDED : ஆக 30, 2025 11:45 PM

திருப்பூர்: ஆயிரத்து நுாறு விநாயகர் சிலைகளுடன் ஹிந்து முன்னணியின் விசர்ஜன ஊர்வலம், திருப்பூரில் பிரமாண்டமாக நடந்தது.ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஹிந்து முன்னணி சார்பில், திருப்பூர் மாவட்டம் முழுதும், 5 ஆயிரம் சிலைகளை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாநகர மாவட்டம் சார்பில், நகரில், ஆயிரத்து 100 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. கடந்த, மூன்று நாட்களாக அன்னதானம் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
மூன்று இடங்களில் இருந்துபுறப்பட்ட சிலைகள் நான்காம் நாளான நேற்று மாலை விசர்ஜன ஊர்வலம் நடந்தது. புதிய பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு சந்திராபுரம் பிரிவு, செல்லம் நகர் என, மூன்று இடங்களுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்துவந்த விநாயகர் சிலைகள் அணி வகுத்து நின்றன.
தாராபுரம் ரோட்டில் ஊர்வலத்தை நடிகர் ரஞ்சித், மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், பா.ஜ., கவுன்சிலர் தங்கராஜ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பெண்கள் முளைப்பாலிகை எடுத்துவந்தனர். செண்டை மேளம், தய்யம் கலைஞர்கள், பிரமாண்ட சிவபெருமான், விநாயகர் சிலைகள் அணி வகுத்து வந்தன. கரட்டாங்காடு வழியாக, வெள்ளியங்காடு, டி.கே.டி., பஸ் ஸ்டாப், மேம்பாலம், மாநகராட்சி சந்திப்பு என, பயணித்த ஊர்வலம் ஆலாங்காட்டை சென்றடைந்தது.
புதிய பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலத்தை பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் பழனிசாமி, சேவா பாரதி மாநில துணை தலைவர் ராமசாமி, சேலஞ்சர் துரை ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மாநில பொது செயலாளர் கிஷோர் குமார், மாநில செயலாளர்கள் சேவுகன், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் கொடி அணி வகுப்புடன், 108 விநாயகர் சிலைகள், ஆஞ்நேயர் உள்ளிட்ட வாகனங்கள் பல்வேறு வீதிகள் வழியாக பயணித்து பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை சென்றடைந்தது.
மங்கலம் ரோடு, செல்லம் நகரில் துவங்கிய ஊர்வலத்தை சினிமா இயக்குனர் மோகன்ஜி, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ஹிந்து முன்னணி மாவட்ட நிர்வாகி செந்தில், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். செல்லம் நகர் பிரிவு, கே.டி.சி., பள்ளி வீதி, ஏ.பிடி., ரோடு வழியாக ஆலாங்காடு சென்றடைந்தது. தாராபுரம் ரோடு, பி.என்., ரோடுகளில் அணி வகுத்து சென்ற விநாயகர் ஊர்வலகத்தை பொதுமக்கள் ரோட்டின் இருபுறங்களில் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர்.
பலத்த பாதுகாப்பு மாநகரில் பல இடங்களில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் உட்பட 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், ஏற்கனவே மாநகரில் பணியாற்றி சென்ற உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுதவிர, ஊர்க்காவல் படை, டிராபிக் வார்டன் என, பலரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.