/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமை வழிச்சாலையா? புற வழிச்சாலையா? பல்லடம் மக்கள் குழப்பம்
/
பசுமை வழிச்சாலையா? புற வழிச்சாலையா? பல்லடம் மக்கள் குழப்பம்
பசுமை வழிச்சாலையா? புற வழிச்சாலையா? பல்லடம் மக்கள் குழப்பம்
பசுமை வழிச்சாலையா? புற வழிச்சாலையா? பல்லடம் மக்கள் குழப்பம்
ADDED : ஏப் 10, 2025 11:46 PM

பல்லடம்; பல்லடத்தில், பசுமை வழி மற்றும் புறவழிச்சாலை திட்டங்கள் ஒரே திசையில் கொண்டுவர திட்டமிடப்பட்டிருப்பது, பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சரக்கு போக்குவரத்துக்கு பிரதானமாக உள்ளது. பல்லடம் வழியாக செல்லும் இந்த நெடுஞ்சாலையுடன், திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி, கொச்சி, உடுமலை, அவிநாசி ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைகின்றன. பிரதான மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தும் நகரப் பகுதியில் இணைவதால், பல்லடத்தில் கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இருவழிப்பாதையாக இருந்த தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், வாகன போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்க கூடும் என்பதால், பல்லடத்தில், உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதுடன், புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள், நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
கிடப்பில் திட்டங்கள்
கரூர் - -கோவை பசுமைவழிச் சாலை திட்டம், விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக கிடப்பில் போடப்பட்டது. கடந்த, ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காளிவேலம்பட்டி - - மாதப்பூர் புறவழிச் சாலையும் கிடப்பில் போடப்பட்டது. கடந்த, ஏழு ஆண்டுகளாக, பல்லடத்துக்கான எந்த வித திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. ஆய்வு செய்வதும், பின், கிடப்பில் போடுவதுமே தொடர்கதையாக உள்ளது. இதற்கிடையே, சட்டசபை கூட்ட தொடரில், கொச்சி ரோட்டில் இருந்து மாதப்பூரை இணைக்கும் வகையில், புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று
அமைச்சர் வேலு தெரிவித்தார். இதற்கான நில அளவீடு செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
கையக நிலங்களின் கதி?
பொதுமக்கள் கூறியதாவது: பசுமை வழிச்சாலை, காரணம்பேட்டை, பணிக்கம்பட்டி, வெங்கிட்டாபுரம், சித்தம்பலம் கிராமங்கள் வழியாக மாதப்பூர் வரை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் தற்போதும் பூஜ்ஜிய மதிப்பில் தான் உள்ளன. இதேபோல், காளிவேலம்பட்டி -- மாதப்பூர் புறவழிச்சாலைக்கு கையகப்படுத்த திட்டமிடப்பட்ட நிலங்களின் மதிப்பும் பூஜ்ஜியத்தில் தான் உள்ளன. இதற்கிடையே, பணிக்கம்பட்டி - - மாதப்பூர் வரை புறவழிச் சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
வரிப்பணம் வீணாகும்
பசுமை வழிச்சாலை வருமா, இல்லையா என்பதே இன்னும் தெரியவில்லை. அவ்வாறு, வருமானால், இதே திசையில் புறவழிச் சாலை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. பசுமை வழி சாலை வரும்போது, புறவழிச்சாலை அமைக்கப்பட்டால், திட்டம் வீணாவதுடன், மக்களின் வரிப்பணமும் வீணாகும். ஒரே திசையில் மேற்கொள்ளப்படும் இரு திட்டங்களால், ஏராளமானோர் நிலங்களை இழக்க வாய்ப்பு உள்ளது.
எந்த திட்டம் கொண்டுவரப்பட உள்ளது என்பதை உறுதி செய்த பின், அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.