/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருத்துவமனை திட்டமிட்டு கட்டினால் இப்போது இருக்கும் இடமே போதும்!
/
மருத்துவமனை திட்டமிட்டு கட்டினால் இப்போது இருக்கும் இடமே போதும்!
மருத்துவமனை திட்டமிட்டு கட்டினால் இப்போது இருக்கும் இடமே போதும்!
மருத்துவமனை திட்டமிட்டு கட்டினால் இப்போது இருக்கும் இடமே போதும்!
ADDED : மார் 22, 2025 06:59 AM

பல்லடம் : பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில், அரசு மருத்துவமனை உள்ளது. தினசரி, 700க்கும் அதிகமான புறநோயாளிகள் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பல்லடம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த, 5 ஏக்கர் இடம் தேர்வு செய்யலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஏற்கனவே உள்ள பழைய அரசு மருத்துவமனையில் போதிய இடம் இருக்க, புதிய இடம் தேடுவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்த, சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறியதாவது:
பல்லடம் நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த மருத்துவமனை, எளிய மக்களுக்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது. ஏறத்தாழ, ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, சரியான திட்டமிடல் இன்றி, அவசர சிகிச்சை, தீவிர சிகிச்சை, புற நோயாளிகள் பிரிவு, எக்ஸ்ரே, குழந்தைகள், கர்ப்பிணிகள் வார்டு என, திசைக்கு ஒன்றாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. பெட்டி பெட்டியாக கட்டப்பட்ட கட்டடங்களால், இடம் இருந்தும் இடப்பற்றாக்குறை உள்ளது.
சமீபத்தில் கட்டப்பட்ட நோயாளிகள் காத்திருப்பு அறை, சிலிண்டர் வைக்கும் அறை உள்ளிட்டவை முறையான பயன்பாட்டில் இல்லை. புதிதாக தருவிக்கப்பட்ட 'டயாலிசிஸ்' இயந்திரம் எட்டு மாதமாகியும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
போதிய மருத்துவர்கள், உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் இன்றி, நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற அவலங்கள் இருக்க, மருத்துவமனையை மேம்படுத்தும் நோக்கில் புதிய இடம் தேடுவது சரியாகுமா என்பது குறித்து யோசிக்க வேண்டும்.
தற்போதுள்ள இடத்திலேயே, உரிய திட்டமிட்டு, அடுக்குமாடியுடன் கூடிய மருத்துவமனையை கட்டலாம். பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின் அதற்கேற்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.