/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரு மாதத்தில் மட்டும்... சிவன்மலைக்கு 5 லட்சம்: அவிநாசிக்கு 31 ஆயிரம் ஆன்மிக தலங்களில் திரண்ட பக்தர்கள் கூட்டம்
/
ஒரு மாதத்தில் மட்டும்... சிவன்மலைக்கு 5 லட்சம்: அவிநாசிக்கு 31 ஆயிரம் ஆன்மிக தலங்களில் திரண்ட பக்தர்கள் கூட்டம்
ஒரு மாதத்தில் மட்டும்... சிவன்மலைக்கு 5 லட்சம்: அவிநாசிக்கு 31 ஆயிரம் ஆன்மிக தலங்களில் திரண்ட பக்தர்கள் கூட்டம்
ஒரு மாதத்தில் மட்டும்... சிவன்மலைக்கு 5 லட்சம்: அவிநாசிக்கு 31 ஆயிரம் ஆன்மிக தலங்களில் திரண்ட பக்தர்கள் கூட்டம்
ADDED : நவ 19, 2024 06:39 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் திருமூர்த்தி மலை, அமராவதி அணை, பஞ்சலிங்க அருவி, சின்னாறு, அமராவதி முதலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. அதோடு, ஆன்மிக சுற்றுலா தலங்களும் பரவி இருக்கின்றன.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டியில் திருமுருகநாதர் சுவாமி கோவில், உடுமலையில் அமணலிங்கேஸ்வரர் மற்றும் திருப்பதி கோவில்கள், மானுபட்டியில் ஏழுமலையான் கோவில், காங்கயம் சிவன்மலை கோவில், திருப்பூரில் சுக்ரீஸ்வரர் கோவில், சாமளாபுரத்தில் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில், தாராபுரத்தில் அனுமந்தராயர் சுவாமி கோவில் என, பழம்பெருமை வாய்ந்த, தேவாரம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் பாடல் பெற்ற கோவில்கள் நிறைந்த ஆன்மிக பூமியாகவும் திருப்பூர் விளங்குகிறது. இக்கோவில்கள், மாநில சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் வரைபடத்திலும் இடம் பிடித்துள்ள நிலையில், ஆண்டு முழுக்க பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இருப்பினும், 'கடந்த மாதம், தீபாவளி பண்டிகை உள்ளிட்ட விசேஷ நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள் அதிகளவில் இருந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு, 5 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர்' என, சுற்றுலாத்துறை கணக்கெடுப்பு கூறுகிறது. இதில், காங்கயம் - சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு மட்டும், அதிகபட்சமாக, 2.75 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். வாழைத்தோட்டத்து அம்மன் கோவிலுக்கு, 35 ஆயிரம் பேர். உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு, 40 ஆயிரம். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு, 31 ஆயிரம் பேர் என, பக்தர்கள் வந்து சென்றுள்ளனர். 'மாவட்டத்தில் உள்ள ஆன்மிக சுற்றுலா தளங்களுக்கு மாதந்தோறும், 4 முதல், 5 லட்சம் பக்தர்கள் மற்றும் பயணிகள் வந்து செல்கின்றனர்,' என்கின்றனர் சுற்றுலா துறையினர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள், வனத்துறை, ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறை என, பல்வேறு துறையினரின் கண்காணிப்பு, கட்டுப்பாட்டின் கீழ் கோவில்கள் உள்ளன.
இந்த இடங்களையெல்லாம், அனைத்து துறையினரின் ஒருங்கிணைப்புடன் சுற்றுலா தலமாக மாற்றி, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வருகையை அதிகரிக்கச் செய்யவும், அதன் வாயிலாக, கூடுதல் வருவாய் பெறும் வகையிலும் திட்டமிடப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

